தினமணி 27.01.2014
குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
திருச்சி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த 33 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றிய மேயர் அ.ஜெயா இந்த சான்றிதழ்களை வழங்கினார்.
வைகுண்ட ஏகாதசி திருவிழா பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பேருந்து விரைவுத் திட்டம் மற்றும் நவீன ஆட்டிறைச்சி கூடம் அமைக்க கருத்துரு தயார் செய்த அலுவலர்கள், பஞ்சப்பூர் பூங்கா அமைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட அலுவலர் ஆகியோருக்கும், மாநகராட்சிப் பள்ளி கலைநிகழ்ச்சிகள், யோகாசனப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் வழங்கினார். பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் 5 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள மகாத்மாகாந்தியடிகள் அஸ்தி மண்டபம், போர்வீரர்கள் நினைவுத் தூணில் மலரஞ்சலி செலுத்திய மேயர், காந்தி மார்க்கெட்டிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் துணை மேயர் மரியம் ஆசிக், ஆணையர் வே.ப. தண்டபாணி, கோட்டத் தலைவர்கள் ஜெ.சீனிவாசன், எம். லதா, என். மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.