தினமணி 25.01.2014
நிலுவையைச் செலுத்தாத குத்தகைதாரர்களின் கடை உரிமம் ரத்து
திருநெல்வேலி மாநகராட்சியின் கடைகளுக்கான குத்தகை நிலுவையைச் செலுத்தாதவர்களின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, பாளையங்கோட்டை மண்டல மாநகராட்சி நிர்வாக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட மாநகராட்சிக் கடைகளை குத்தகைக்கு எடுத்துள்ள குத்தகைதாரர்கள், ஒப்பந்த விதிப்படி மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் வாடகையைச் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும். ஆனால், பாளையங்கோட்டை மண்டலத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் பலமுறை அறிவிப்புகள் வழங்கியும் குத்தகை தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.
எனவே, நிலுவையில் உள்ள வாடகையை விரைந்து செலுத்த வேண்டும். இல்லையெனில், முன்அறிவிப்பு இல்லாமல் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலத்துக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.