தினமணி 25.01.2014
மதுரை மாநகரில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மதுரை மாநகரில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
மதுரை மாநகரில் கோடைகாலத்தில் சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியது:
பருவமழை பொய்த்த காரணத்தால், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் கோடைகாலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறுகள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு, தனியார் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.
விரிவாக்கப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், மாநகராட்சி வார்டு பகுதிகளில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி பொறியாளர்கள் இப்போதிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.
மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளிலுள்ள குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து குடிநீர் தொடர்ந்து சீராக விநியோகம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.
கூட்டத்தில், நகரப் பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், திருஞானம், அரசு, ராஜேந்திரன், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.