தினகரன் 23.01.2014
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி
அனுப்பர்பாளையம், : திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின் பேரில், புத்தாக்கப்பயிற்சி திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் மண்டல அலுவலக உதவி ஆணையர் ஷபியுல்லா தலைமையில் நடைபெற்றது.
இதில், சுப்பையா மெட்ரிக் பள்ளி, சந்திரகாவி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர் மெட்ரிக் பள்ளி, பிரேமா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 70 க்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தாசில்தார் சுப்பிரமணியம் அனைவருக்கும் பயிற்சியளித்தார். இதில், தேர்தல் பணியாற்றுவோரின் கடமை, வாக்குச்சாவடி செயல்பாடு, வாக்குப்பதிவு, வாக்குப்பதிவானதும் வாக்கு மெஷின்களை சீல்வைப்பது ஆகியன குறித்து விளக்கப்பட்டது. மேலும், வரும் 25ல் வாக்காளர் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பன குறித்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதே போல அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், குலாலர் திருமண மன்டபத்தில் தாசில்தார் தேவமனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பயிற்சியளித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.