தினமணி 10.01.2014
15-இல் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை
திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் ஜன.15-இல் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
வரும் 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும் இறைச்சி விற்பனை செய்வதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15-ஆம் தேதி ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் உக்கடம், சிங்காநல்லூர், துடியலூர் ஆடு அறுவை மனைகள், கணபதியில் உள்ள மாடு அறுவை மனை மற்றும் 10 இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவை மீறிச் செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.