தினகரன் 08.01.2014
மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
அனுப்பர்பாளையம், : திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலப்பகுதியில் கடந்த 2012-2013ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய ரூ.29 லட்சத்து 7ஆயிரத்து 624 வரி நிலுவையில் உள்ளது. நடப்பாண்டில் செலுத்த வேண்டிய ரூ.4 கோடியே 91 லட்சத்து 26ஆயிரத்து 562 வரி நிலுவையில் உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 70 லட்சத்து 34 ஆயிரத்து 126 வரி நிலுவையில் உள்ளது. சென்ற நிதியாண்டில் 72 சதவீதம் வசூலானது. நடப்பாண்டில் இது வரை 41.60 சதவீதம் மட்டும் வசூலாகியுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக வரி வசூல் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை குடிநீர் துண்டிப்பு அறிவிப்பு செய்திருந்தனர். இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் உத்தரவின்பேரில், முதலாவது மண்டல உதவி ஆணையாளர் முகமதுஷபியுல்லா முன்னிலையில், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், குழாய் ஆய்வாளர் மசாருதீன், வருவாய் உதவியாளர் பிரபாகரன், மாநகராட்சிப் பணியாளர்கள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்டக் கட்டணத் தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.
இதில், சாமுண்டிபுரம் முதலாவது வீதியை சேர்ந்த கனகராஜ், 11-ஆவது வார்டு பாரதி நகர் பிரேமலதா, ஈ.பி.காலனியைச் சேர்ந்த ரகு ஆகியோரது சொந்த கட்டிடத்தின் முன்புறம் இருந்த குடிநீர் இணைப்பை நேற்று அதிகாரிகள் துண்டிப்பு செய்தனர்.
மீண்டும் குடிநீர் இணைப்பை பெற, அபராதம் செலுத்த வேண்டும் என்பதால் பொதுமக்கள் உடனடியாக வரியினங்களின் பாக்கிகளை செலுத்த உடனடியாக முன்வர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.