Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 1,796 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு

Print PDF

தினத்தந்தி               08.01.2014

திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் 1,796 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இதர பொருட்கள் வாங்க ரூ.100 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த விழாவுக்கு பேரூராட்சி துணைத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். அவினாசி மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி வரவேற்று பேசினார். அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து குமரன் காலனி, பாரதி நகர், உமையஞ்செட்டிபாளையம், அணைப்புதுர், கோபால்டு மில் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று 1,796 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் லதா, கோபால், அ.தி.மு.க. அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ராசு என்கிற பழனிச்சாமி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் அவினாசிலிங்கம் நன்றி கூறினார்.

 

255 வீட்டுமனைகளுக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்

Print PDF

தினமணி              07.01.2014

255 வீட்டுமனைகளுக்கு 70 ஆயிரம் விண்ணப்பங்கள்

சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திங்கள்கிழமை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய  வீட்டுமனைகள் மற்றும் கடைகளுக்கான விண்ணப்பங்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் திங்கள்கிழமை குலுக்கல் முறையில் விற்பனை செய்ய  வீட்டுமனைகள் மற்றும் கடைகளுக்கான விண்ணப்பங்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) குலுக்கல் முறையில் விற்பனை செய்ய உள்ள 255 வீட்டுமனைகள் மற்றும் கடைகளை வாங்க 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறைமலைநகர், மணலி புதுநகர், கூடலூர், சாத்தாங்காடு ஆகிய இடங்களில் மொத்தம் 255 வீட்டுமனைகள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள கடைகளை குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஒதுக்கீடு செய்ய உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் கடந்த மூன்று வாரங்களாக பெறப்பட்டு வந்தன.  விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (ஜனவரி 6) பெறப்பட்ட 35 ஆயிரம் விண்ணப்பங்களுடன் சேர்த்து மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடைசி நாள் என்பதால் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஆயிரக்கணக்கானோர் எழும்பூர் சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விண்ணப்பங்களின் தகுதியின் அடிப்படையில், பிப்ரவரி 8-ஆம் தேதி வீட்டுமனைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் நடைபெறும் என சி.எம்.டி.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன.

70 ஆயிரம் விண்ணப்பங்கள் மூலம் பதிவுக் கட்டணமாக சி.எம்.டி.ஏ.வுக்கு ரூ. 7 கோடி கிடைத்துள்ளது. பதிவுக் கட்டணமாக விண்ணப்பம் ஒன்றுக்கு பெறப்பட்டுள்ள ரூ.1,000  விண்ணப்பதாரர்களுக்கு திரும்ப தரப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நம்ம டாய்லெட் திட்டம்: குஜராத் அதிகாரிகள் பாராட்டு

Print PDF

தினமணி              07.01.2014

நம்ம டாய்லெட் திட்டம்: குஜராத் அதிகாரிகள் பாராட்டு

தமிழக நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே வழிகாட்டுதலின் பேரில் வடிவமைக்கப்பட்டு, தாம்பரத்தில் அனைவரது ஏகோபித்த பாராட்டை பெற்று செயல்பட்டு வரும் "நம்ம டாய்லெட்' கழிப்பிட திட்டத்துக்கு குஜராத் மாநில அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி, முடிச்சூர் பேரூராட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுசுகாதாரத் திட்டங்களை குஜராத் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் வி.திருப்புகழ், நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் மோனா காந்தார், ஆமதாபாத் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் நரேஷ் ஆர்.ராஜ்புத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

தாம்பரம் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லெட் கழிப்பறையின் வடிவமைப்பு, சுகாதாரத்துடன் பராமரிக்கும் முறை, வெளி மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினரின் பாராட்டுக் குறிப்பு உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் சேலையூர் பாரத் நகரில் 135 குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் சமுதாய கழிப்பறைகளை அவர்கள் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் முடிச்சூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் சமுதாய கழிப்பறைகளையும் பார்வையிட்டனர். பின்னர் குஜராத் ஊரக வளர்ச்சித்துறை செயலர் வி.திருப்புகழ் தினமணி செய்தியாளரிடம் பேசும்போது, நகர்ப்புறப் பகுதிகளில் மனித கழிவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பொதுசுகாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்களான நம்ம டாய்லெட், நம்ம சமுதாய சமையல்கூடம் ஆகியவை இங்கு பாராட்டத்தக்க வகையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இந்த திட்டங்களை குஜராத்தில் செயல்படுத்துவது குறித்து முதல்வருடன் கலந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்றார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு திட்ட மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், கூடுதல் இயக்குனர் லட்சுமிபதி, நகராட்சிகள் நிர்வாக உதவி பொறியாளர் வி.முருகேசன், தாம்பரம் நகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன், தாமஸ்மலை வட்டார வளர்ச்சி அதிகாரி மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 


Page 195 of 3988