தினகரன் 06.01.2014
தர்மபுரி நகராட்சிக்கு ரூ2 கோடியில் புதிய அலுவலகம் கட்டுமானப்பணிகள் தீவிரம்
தர்மபுரி, : தர்மபுரி நகராட்சிக்கு ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தர்மபுரி 1964ம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 1971ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 2008ம் ஆண்டில் இருந்து தேர்வுநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 ச.கி.மீட்டர் ஆகும். நகரின் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 68 ஆயிரத்து 595 ஆகும். நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
நகராட்சியின் கட்டிடங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை. மேலும், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள கட்டிடங்களில் அலுவலகம் செயல்படுத்தவும், பணியாளர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் தமிழக முதல் அமைச்சரின் இயக்கமும்- பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் புதியதாக நகராட்சிக்கு கட்டிடம் கட்ட ரூ140 லட்சம் மற்றும் நகராட்சி பொது நிதியில் ரூ60 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நவம்பர் 9ம் தேதி நடந்தது. புதிய அலுவலக கட்டப்படும் இடத்தின் மொத்த பரப்பளவு 17ஆயிரத்து 760.45 ச.அடி ஆகும். இதில் தரைதளம் 5,968.55 சதுர அடி, முதல் தளம் 5,868.61 சதுர அடியில் மற்றும் இரண்டாம் தளம் 5,868.61 சதுர அடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எளிதில் தெரியும் வகையில் தரைதளத்தில் காத்திருப்போர் அறை, தகவல் மையம், நகர்மன்றத் தலைவர் அறை, ஆணையர் அறை, பொதுப்பிரிவு, கணினி அறை, சமுதாய அமைப்பாளர்கள் அறையும், முதல் தளத்தில் சுகாதார அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, வருவாய்ப்பிரிவு, நகரமைப்பு பிரிவு, நகராட்சி பொறியாளர் மற்றும் பொறியியல் பிரிவும், இரண்டாம் தளத்தில் நகர்மன்றக்கூடம், பதிவேடுகள் பாதுகாப்பு அறையும் திட்டமிடப்பட்டது.
மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும் செய்யப்பட உள்ளது. கட்டிடத்தில் லிப்ட் வசதியும், நவீன கழிப்பறை வசதிகள் கட்டப்பட உள்ளது. தற்போது கட்டுமானப்பணிகளில் பில்லர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பேஸ்மெண்ட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.