தினமணி 06.01.2014
போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க வேண்டும்
கோவை மாநகராட்சி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை மாநகரில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
கோவை மாநகராட்சி கழிவுகள் சரியாக அகற்றப்படாத காரணத்தாலும், சாக்கடைகளை தூர்வாராத காரணத்தாலும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா, சிக்கன்குன்யா போன்ற விஷக் காய்ச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீரியம் மிக்க கொசு மருந்துகளை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் கொசுகளை ஒழிக்க நடவடிக்கை மாநகராட்சி எடுக்க வேண்டும்.
கோவை மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.