Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கணினி மயமாகிறது மாநகராட்சி, நகராட்சி வரவு-செலவு கணக்குகள்

Print PDF

தினமணி               06.01.2014

கணினி மயமாகிறது மாநகராட்சி, நகராட்சி வரவு-செலவு கணக்குகள்

மாநகராட்சிகள், நகராட்சிகளின் வரவு, செலவு கணக்குகளை கணினி மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

 தமிழகத்திலுள்ள, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வரவு, செலவு கணக்குகள் முறையாக கையாளப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ளது. அவ்வப்போது, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிகளைக் கூட முறையாக செலவிடாமல், பெரும்பாலான அமைப்புகள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த அமைப்புகளில் வரிவருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு, மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களில் ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களுக்கு விவரங்களும் தெளிவற்ற நிலையில் வைக்கப்படுவதாகவும், பெரும்பாலான திட்டப்பணிகள் மீதான தணிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும் புகார்கள் கூறப்படுகிறது.

  சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முறையாக வரவு, செலவு திட்ட அறிக்கைகளை தயாரித்து மாமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதற்கான நடைமுறைகள் ஜன. 15, 16இல் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.

அவ்வப்போது, சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மத்திய தணிக்கை அலுவலகத்திலுள்ள அலுவலர்கள் மாவட்ட வாரியாகச் சென்று வரவு, செலவுகளை தணிக்கை செய்து வருகின்றனர். இதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருகின்றன. மேலும், கணக்குகளின் ஆவணங்கள் பராமரிப்பிலும் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முறையாக நிதிகள் செலவிடப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகள் கணினி மூலம் சென்னை நகராட்சி நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக, 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கணக்குகள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இதற்கான பிரத்யேக கணினி மென்பொருள்(சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறியது: இந்த மென்பொருளை கையாள்வது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கோவை சாய்பாபா காலனியிலுள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிலையத்தில் பகுதி பகுதியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இதில், முக்கியமாக, ஆண்டுதோறும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வரவு செலவு திட்டஅறிக்கை தயாரித்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்குகளை கணினியில் முறையாக பராமரிக்கவும்,   இதற்கான மென்பொருள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

  ஜனவரி 15ஆம் தேதி மாநகராட்சிகளிலும், ஜனவரி 16ஆம் தேதி முதல் நகராட்சிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக செய்தி மடல்

Print PDF
தினமணி               06.01.2014

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக செய்தி மடல்

மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்த செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 92 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 4 மாநகராட்சி பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் மற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பெற்ற பயன்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாநகராட்சி கல்வி அதிகாரி ரவிச்சந்திரன், "எவரெஸ்ட் எடுசிஸ் சொல்யூஷன்' நிறுவனத்தின் துணைத்தலைவர் உமா மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகளுக்கென பிரத்யேக செய்தி மடல் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- மாநகராட்சி பள்ளிகளின் நடவடிக்கைகள், சாதனைகள், புதிய முயற்சிகள் ஆகியவை செய்தி மடலில் இடம்பெற்றிருக்கும். மாதம் இரு முறை 4 பக்கங்களாக செய்தி மடல் வெளியிடப்பட உள்ளது.

இது மாநகராட்சி பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் விநியோகிக்கப்படும். சுமார் 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பிறகு செய்தி மடலைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்

"தேசிய அறிவியல் தினம்' பிப்ரவரி 28-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான அறிவியல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக சிங்கப்பூர் இலவச பயணம், இரண்டாம் பரிசாக இந்தியாவில் உள்ள ஏதேனும் அறிவியல் மையத்துக்கு இலவச பயணம், மூன்றாம் பரிசாக லேப்டாப் அல்லது ஐ-பேட் வழங்கப்பட உள்ளது. விரைவில் இந்த போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

6 பள்ளிகளில் அறிவியல் மையங்கள்

திருவொற்றியூர், கும்மாளம்மன் கோயில், வியாசர்பாடி, மடுமாநகர், ஏ.பி.சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்குள் அறிவியல் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

மாநகராட்சிக்கு செல்ல வேண்டாம் ‘வரி விதிப்பு வாகனம்’ உங்களைத்தேடி வருகிறது மாவட்ட அளவில் புதிய திட்டம் அறிமுகம்-கமிஷனர் தகவல்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

மாநகராட்சிக்கு செல்ல வேண்டாம் ‘வரி விதிப்பு வாகனம்’ உங்களைத்தேடி வருகிறது மாவட்ட அளவில் புதிய திட்டம் அறிமுகம்-கமிஷனர் தகவல்

வரி விதிப்பு கேட்டு கட்டிட சொந்தக்காரர்கள் மாநகராட்சிக்கு அலையவேண்டாம் என்றும், ‘வரிவிதிப்பு வாகனம்’ சம்பந்தப்பட்டவர்களைத் தேடிச் செல்லும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றும் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பு கேட்டு...

வேலூரில் புதிதாக வீடு கட்டி குடியிருப்பவர்களும் அதுபோல கடைகள், வணிக வளாகம் கட்டியிருப்பவர்களும் தங்கள் கட்டிடங்களுக்கு வரி விதிக்க கேட்டு மாநகராட்சிக்கு அலைவதை அன்றாடம் காணலாம். வரி செலுத்திய ரசீது இருந்தால்தான் வங்கி கடன் உள்பட பல்வேறு சலுகைகளை பெற முடியும் என்கிற விதி நடைமுறையில் இருப்பதால் மாநகராட்சி ரசீதிற்கு, அவ்வளவு மரியாதை உள்ளது.

வேலூர் மாநகராட்சி சார்பில் நடைபெறும் ஒவ்வொரு கவுன்சிலர்கள் கூட்டத்திலும், புதிய வீடுகளுக்கு, கட்டிடங்களுக்கு வரிவிதிக்க கேட்டு என்னுடைய வார்டைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சிக்கு அடிக்கடி செல்கிறார்கள். ஆனால் அங்குள்ள அலுவலர்கள் வரி விதிப்பது இல்லை, என்று மாநகராட்சியை குற்றம் சாட்டி கவுன்சிலர்கள் பேசி வருவது தெரிந்ததே. புதிய கட்டிடங்களுக்கு எப்போதுதான் வரிவிதிக்கப்படும் என்று வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரூ.8 கோடி வசூல்

பொது மக்கள், வியாபாரிகள், அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் சொத்து வரி. தொழில் வரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் பல்வேறு இனங்களில் இருந்துதான் மாநகராட்சி மக்கள் நலத்திட்டங்களை செய்திட முடியும். ஆனால் வரி வசூல் பணி மந்தமாகவே இருந்தது, அதாவது மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு மட்டும் வரி பாக்கியாக சுமார் ரூ.13 கோடி இருந்தது. அதைத்தொடர்ந்து எடுத்த பல்வேறு தீவிர நடவடிக்கையின் காரணமாக ரூ. 8 கோடி வசூல் ஆனது. மீதமுள்ள ரூ.5 கோடியை வசூலிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநகராட்சியின் வருவாயை பெருக்க, புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்வதென்றும், அந்த வரியையும் உடனடியாக பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வரி விதிப்பு வாகனம்


அதைத்தொடர்ந்து நடமாடும், வரி விதிப்பு வாகனம் உருவாக்கப்பட்டது. அந்த வாகனத்தில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அலுவலர்களும் இருப்பார்கள். அவர்கள் மண்டலம் வாரியாக செல்வார்கள் அங்கு புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட வீடு மற்றும் நிறுவனங்களுக்கு சென்று அந்த கட்டிடத்தை அளந்து அங்கேயே வரி விதிப்பு செய்து அதற்கான நோட்டீசை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கிவிடுவார்கள். அவர்கள் விரும்பினால் அங்கேயே வரியை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்றும் வரியை செலுத்தலாம்.

அதன்படி வேலூர் 1-வது மண்டலத்தில் ‘வரி விதிப்பு வாகனம்’ மூலம் கடந்த வாரம் மட்டும் 40 கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது பரீட்சாத்தமாக அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநகராட்சியின் இதர மண்டலங்களுக்கும் விரிவு படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2-வது மண்டலம்

தற்போது ‘வரி விதிப்பு வாகனம்’ வேலூர் 2-வது மண்டலத்தில் முகாமிட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அந்த வாகனத்தின் மூலம், மண்டல அலுவலர் கண்ணன் தலைமையில், அலுவலர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டதில், சுமார் 20 கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

 


Page 202 of 3988