Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி



திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் வரி பாக்கி வைத்தவரின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக துண் டித்தனர்.

ரூ.10 ஆயிரம் வரி பாக்கி

திருப்பூர் மாநகராட்சியில் இதுவரை சுமார் 60 சதவீத வரித்தொகைகள் மட்டுமே வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட தொகைகளை செலுத்தாமல் காலதாமதம் செய்து வருபவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள பாலகிருஷ்ணன் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் வரி செலுத்தாமல் நீண்ட நாட்களாக காலம் கடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி வரிவசூல் அதிகாரி சரவணன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் பாலகிருஷ்ணனின் வர்த்தக நிறுவனத்தில் இருந்த குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

எச்சரிக்கை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் கூறியதாவது:-

மாநகராட்சி முழுவதும் நீண்ட நாட்களாக வரிபாக்கி வைத்துள்ளவர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. 2-வது மண்டல பகுதியில் இதுவரை மாநகராட்சிக்கு நீண்டகாலம் வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ள 30 பேரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக வரித்தொகைகளை செலுத்தாத பட்சத்தில் எவ்வித தயவுமின்றி அவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் குடிநீர் இணைப்பு பெற ரூ.30 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்பதால் மக்கள் உடனடியாக வரிபாக்கிகளை செலுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

சேலத்தில் ரூ.1000 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தகவல்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

சேலத்தில் ரூ.1000 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தகவல்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சேலம் மாநகரில் ரூ.1,000 கோடியில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது என சேலத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆனந்தா பாலம்

சேலம் மாநகரில் முதல்அக்ரஹாரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ஆக்ஸ்போர்டு-ஆனந்தா மேம்பாலம் கட்டப்பட்டு அதன் இணைப்பு சாலைகள் விரிவாக்க பணிகள் ரூ.1.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருமணிமுத்தாற்றின் குறுக்கே குண்டுபோடும் தெரு மற்றும் திருச்சி மெயின்ரோடு சாலையினை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு ரூ. 87 லட்சத்தில் இணைப்பு சாலைகளின் பணிகளும் முடிக்கப்பட்டிருந்தது.

இணைப்பு சாலைகள் திறப்பு

இந்தநிலையில், திருமணிமுத்தாறு ஆனந்தா பாலம் இணைப்புசாலை மற்றும் குண்டுபோடும் தெரு பாலம் இணைப்புசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, குண்டுபோடும் தெருபாலம் மற்றும் ஆனந்தா பாலம் இணைப்பு சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருமணிமுத்தாறு ஆனந்தா பாலம் கடந்த தி.மு.க.ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. இருப்பினும், பாலம் கட்டினால் மட்டும் போதுமா?. அதற்கு தேவையான இணைப்பு சாலைகளும் தேவை. அப்போது தான் பாலம் முழுவடிவம் பெறும்.

வாக்குறுதி நிறைவேற்றம்

தேர்தல் நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சேலத்தில் உள்ள ஆனந்தா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்தார். அதன்படி ரூ. 7 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்தது. ஆனால் ஆனந்தா பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும்போது பல்வேறு இடையூறுகள், பிரச்சினைகள் உருவானது. இருப்பினும் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டுவந்து தற்போது ஆனந்தா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்-அமைச்சர் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு சேலம் 5 ரோட்டில் இருந்து 4 ரோடு அருகேயுள்ள நேஷனல் ஓட்டல் வரையிலும் உயர்மட்ட மேம்பாலம் ரூ. 600 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலை வரை உயர்மட்ட பாலமும், குரங்குசாவடி மற்றும் மணல்மேடு பகுதியில் ஒரு பாலமும், முள்ளுவாடி கேட் பகுதியில் 2 மேம்பாலமும், செவ்வாய்பேட்டையில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட உள்ளது.

52 கிலோ மீட்டருக்கு ரிங்ரோடு


குறிப்பாக சொல்லபோனால் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரூ. 1,000 கோடிக்கு பல்வேறு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர அரபிக்கல்லூரியில் ஆரம்பித்து அதே அரபிக்கல்லூரியில் இணையும் வகையில் சேலம் நகரை சுற்றிலும் 52 கிலோ மீட்டருக்கு ரிங்ரோடு அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அ.தி.மு.க.ஆட்சியிலே தொடங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மற்ற மாநகராட்சியில் இல்லாத வகையில் சேலம் மாநகர மக்களுக்கு தேவையான அனைத்து சாலை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும். பொதுமக்களின் வசதிக்காக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஆனந்தா பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதர திட்டப்பணிகள்

முன்னதாக 50-வது வார்டில் எஸ்.ஆர்.எம்.தோட்டம் பகுதியில் சீரமைக்கப்பட்ட கிணற்றிலிருந்து நீரேற்றி மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தையும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், மண்டலக்குழு தலைவர்கள் மாதேஸ்வரன், ஜெயபிரகாஷ், சண்முகம், தியாகராஜன், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேயர் தலைமையில்அதிகாரிகள் பார்வையிட்டனர்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் மேயர் தலைமையில்அதிகாரிகள் பார்வையிட்டனர்

வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ஏற்பாடுகளை திருச்சி மேயர் ஜெயா தலைமையில் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

வைகுண்ட ஏகாதசி

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 31-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது, முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4-45 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்காக நடைபெற்று வரும் சிறப்பு ஏற்பாடுகளை திருச்சி மேயர் ஜெயா, துணை மேயர் ஆசிக் மீரா, ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் லதா, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ரெங்கராஜ், உதவி நிர்வாக என்ஜினீயர் அமுதவல்லி, உதவி என்ஜினீயர்கள் லோகநாதன், வேல்முருகன், கவுன்சிலர்கள் முத்துலட்சுமி(3-வது வார்டு),பச்சையம்மாள்(5-வது வார்டு) மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

சாலை விரிவாக்கப்பணிகள்


ஸ்ரீரங்கம் காந்தி ரோட்டில் சாலையை விரிவாக்கம் செய்ய நடைபெற்று வரும் பேவர் பிளாக் போடும் பணி, சாலை ரோட்டில் தற்காலிக வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு வரும் பணி, 56 சீட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வரும் பணி, குடிநீர் வசதிக்காக நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அம்மா மண்டபம் ரோட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வரும் பணி, வடக்கு தேவி தெருவில் பள்ளிக்கூட கட்டிடப்பணி, அடைய வளஞ்சான் பகுதியில் பிரசன்னா பள்ளிக்கு கட்டிடம் கட்டும் பணி ஆகிய பணிகளை மேயர் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் செய்து முடிக்குமாறு உத்தரவிட்டனர்.

 


Page 203 of 3988