தினமணி 04.01.2014
ஆம்னி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு
மாட்டுத்தாவணியில் நடைபெற்று வரும் புதிய ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, மேயர், ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், ஆம்னி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக, பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையர் கிரன்குராலா தலைமையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, 49 பதிவு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்குடை, மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ஆகியன முடிவடையும் தறுவாயில் இருப்பதையும், தார் சாலை, நவீன கழிப்பறை, பொதுக் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் போன்ற பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதும் தெரியவந்தது.
நுழைவு வாயில் அமைக்கும் பணியும் இழுபறியாக உள்ளது. மாநகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை முற்றிலுமாக மாட்டுத்தாவணிக்கு மாற்றும் விதத்தில்தான், இப்பேருந்து நிலையம் பல கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது.
துவக்கத்தில் இருந்தே பேருந்து பணிகள் தரமாக நடைபெறவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. தற்போது, மேலும் கூடுதல் நிதிகளை பெறும் நோக்கில் பணிகளை இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயரும், ஆணையரும் விரைந்து பணிகளை முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கும், பொறியாளர்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.