பள்ளிகளில் காய்கறி தோட்டம் : சத்துணவு தேவைக்கு தன்னிறைவு
Thursday, 02 January 2014 11:02
administrator
சுற்றுப்புறச் சூழல்
தினமலர் 02.01.2014 பள்ளிகளில் காய்கறி தோட்டம் : சத்துணவு தேவைக்கு தன்னிறைவு ![](http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_88663220140102042215.jpg)
கோவை : கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப்பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைத்து, விளைபொருட்களை சத்துணவு திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக துவங்க ஆயத்த பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் விவசாய வகுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில், காய்கறி தோட்டம் அமைத்து, சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு, வாரத்தில் ஒரு நாள் விவசாய வகுப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில், மாணவர்களால் காய்கறி தோட்டம் பராமரிப்பு, தண்ணீர் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் விவசாய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் விவசாய வகுப்பு நேரம் ஒதுக்குவது கைவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் பாட ஆசிரியர்கள், விவசாய ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பு வகித்தனர். அரசு ஆர்வமில்லாததாலும், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததாலும், அந்த திட்டம் கைவிடப்பட்டது. விவசாய படிப்பு படித்த ஏராளமான இளைஞர்கள், அரசு பள்ளிகளில் மீண்டும் விவசாய வகுப்பு துவங்க வேண்டுமென கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் வாயிலாக, அரசு பள்ளிகளில், காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இந்த திட்டம் பரவலாக்கப்பட்டு, அனைத்து மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியிலுள்ள 16 மேல்நிலைப்பள்ளிகளிலும், காய்கறி தோட்டம் துவங்க, மாநகராட்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், சத்துணவுக்கூடம் அல்லது விளையாட்டு மைதானம் அருகில், இடம் தேர்வு செய்யப்பட்டு, காய்கறி தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமைப்படை திட்டம் மூலம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாத்தல், காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு பராமரித்தல், மழைநீர் சேகரித்தல் போன்ற பயற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து, திறந்தவெளி காய்கறி தோட்டம், மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.
விளைவிக்கப்படும் காய்கறி வகைகள் அந்தந்த பள்ளி சத்துணவு மையங்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை மாநகராட்சி பொதுநிதியில் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் : கடந்த மாமன்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க., கவுன்சிலர் லட்சுமி இளஞ்செல்வி, ""மாநகராட்சி எல்லைக்குள், தனியார் கட்டடங்களில் சோலார் மின் உற்பத்தி, மழை நீர் சேமிப்புக்கு வலியுறுத்துவது போன்று, வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கவும் திட்டமிட வேண்டும்,'' என்றார். பதிலளித்த மேயர் வேலுசாமி, ""வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க உதவ வேண்டுமென, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்படும்,'' என்றார்.
கட்டட வரைவாளர்களுக்கு '16 கட்டளைகள்' இணையதளத்தில் விண்ணப்பிக்க இது அவசியம்
Thursday, 02 January 2014 10:55
administrator
ந௧ர்ப்புற நிர்வா௧ம்
தினமலர் 02.01.2014 கட்டட வரைவாளர்களுக்கு '16 கட்டளைகள்' இணையதளத்தில் விண்ணப்பிக்க இது அவசியம் மதுரை:மதுரை மாநகராட்சியில், வெப்சைட் மூலம் வரைபட அனுமதி வழங்குவது தொடர்பாக, கட்டட வரைவாளர்களுக்கு, '16 கட்டளைகளை' நகரமைப்பு பிரிவு விதித்துள்ளது.
நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வரைபட வரைவாளர்களுக்கு வழங்கிய 16 கட்டளைகள்:
- மனை உரிமையாளர், கட்டடவிண்ணப்பங்களை, வெப்சைட் மூலம் பெற்ற ஆய்வறிக்கையை பெற்ற 15 நாட்களுக்குள், சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பத்துடன், வெப்சைட்டில் பெறப்பட்ட ஆய்வறிக்கை மற்றும் மாநகராட்சிக்கு செலுத்திய கட்டண ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு, முறைப்படுத்திய மனைப்பிரிவின் அனுமதி எண் குறிப்பிடப்பட வேண்டும்.
- கட்டிட வரைபட நகல் 5 இருக்க வேண்டும்.
- அரசிதழில் பதிவுபெற்ற அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் கட்டாயம்.
- ரூ.20 ஸ்டாம்ப் பேப்பரில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெற்று, சமர்ப்பிக்க வேண்டும்.
- மனையின் 4 திசையிலும் நின்று, அதன் உரிமையாளர் எடுத்த போட்டோ வேண்டும்.
- மனை உரிமையாளரின் 2 'பாஸ்போர்ட் சைஸ்' போட்டோ அவசியம்
- திட்டப் பகுதியில் அமையும் கட்டடங்களுக்கு, விதிகளின்படி, அதன் பரப்பளவு முன் திறவிடம், பக்க திறவிடம், பின்புற திறவிடத்தை வரைபடத்தில், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
- முதல் தளத்திற்கு மட்டும் வரைபட அனுமதி கேட்போர், கட்டடத்தின் தரைதள வரைபட நகல் மற்றும் கட்டிய ஆண்டின் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- வரைபடத்தில், கட்டடம் அல்லது மனை உரிமையாளரின் பெயர், மற்றும் வெப்சைட்டில் பெற்ற எண்ணை குறிப்பிடவேண்டும்.
- கட்டட வரைபடத்தில் ரோட்டின் அகலம், ரோட்டில் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
- கட்டட வரைபடத்தின் உட்பிரிவு செய்யப்பட்டசர்வே வரைபடத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- மீனாட்சி அம்மன் கோயிலிருந்து 1கி.மீ., சுற்றளவிற்கு, 9மீட்டர் உயரம் வரை, தரை மற்றும் முதல் தளத்திற்கு மட்டுமே வரைபடம் தயாரிக்க வேண்டும். தரைகீழ் தளத்திற்கு கண்டிப்பாக வரைபடம் சமர்ப்பிக்கக் கூடாது.
- அனைத்து கட்டட வரைபடங்களிலும், குறைந்தபட்சம் முன்புற திறவிடம் மற்றும் பக்கதிறவிடத்தில் 5 அடி துாரம் இருக்க வேண்டும்.
- வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுரஅடி, குடியிருப்பு கட்டடங்களுக்கு 4,000 சதுர அடிக்கு மட்டுமே, மாநகராட்சியின் திட்டஅனுமதி மற்றும் கட்டட அனுமதி கேட்கும் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால், உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்ற பிறகே, மாநகராட்சியின் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும், என தெரிவித்துள்ளனர்.
|
|