Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பல்லடம் நகராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்             02.01.2014

பல்லடம் நகராட்சி கூட்டம்

பல்லடம், : பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வைஸ்.பி.கே.பழனிச்சாமி, ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சித்திக்(திமுக): எனது வார்டில் பட்டேல் வீதிக்கு பச்சாபாளையம் பகுதியில் இருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர். வார்டுக்கு தலா 5 தெருவிளக்கு அமைத்து தருவதாக கூறி ஒரு ஆண்டு ஆகிறது. இன்னும் தெருவிளக்கு அமைத்து தரவில்லை.

சண்முகம்: எனது வார்டில் சுகாதார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மேற்கு பல்லடத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து 12வது வார்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணக்குமார்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை நகராட்சி முன்புறம் அமைக்க வேண்டும் எனக் கூறி ஆணையாளர் நாராயணனிடம் கடிதம் கொடுத்தார். பின்னர் அது, அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் சேகர்: சுகாதார பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். அத்திக்கடவு 2ம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுகிறது. அந்த பணி முடிந்தவுடன் அனைத்து வார்டுக்கும் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படும். மேலும் அண்ணா வணிக வளாகத்தின் மேல் தளத்தில் 40 கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி கூட்டத்தில் பல்லடம் முதல் நிலை நகராட்சி சராசரி வருமானம் ரூ.7கோடியாக உள்ளதால் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்புவது உள்ளிட்ட 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

ரூ.81 லட்சத்தில் மாநகராட்சி வணிக வளாகம் திறப்பு

Print PDF

தினகரன்             02.01.2014

ரூ.81 லட்சத்தில் மாநகராட்சி வணிக வளாகம் திறப்பு

கோவை, :  கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் உள்ள 23 மற்றும் 24வது வார்டுகளில் ரூ.81 லட்சம் மதிப்பில் புதிதாக 19 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. 23வது வார்டு ராமச்சந்திரா சாலை கிழக்கு பகுதியில் ரூ.44 லட்சம் மதிப்பில் 11 கடைகளுடன், வணிக வளாகம், 24 வது வார்டில் 37 லட்சம் மதிப்பில் 8 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல், தெலுங்குபாளையத்தில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் கடன் சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை, மேயர் வேலுச்சாமி திறந்துவைத்தார். மேலும், 87வது வார்டில் பிருந்தாவன் பகுதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணிகளையும், 92வது வார்டில் 5 தெருக்களில் ரூ.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளையும் மேயர் துவக்கிவைத்தார்.

 

மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம்

Print PDF

தினகரன்             02.01.2014

மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம்

கோவை,: கோவை மாநகராட்சி பள்ளிகளில் திறந்தவெளி காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இம்மன்றங்கள் மூலம், கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் ‘திறந்தவெளி காய்கறி தோட்டம்‘ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி சார்பில், ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி என மொத்தம் 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், முதல்கட்டமாக, 16 பள்ளிகளில் இந்த காய்கறி தோட்டங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

தேசிய பசுமை படை திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளிடம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாக்க காய்கறி தோட்டம் அமைத்தல், மண்புழு உரக்குழி பராமரித்தல், மழைநீர் சேகரித்தல் ஆகிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளும் வகையில் இந்த திறந்தவெளி காய்கறி தோட்டம் அமைக்கப்படுகிறது.

இதற்காக, மாநகராட்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி, மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த காய்கறி தோட்டத்துக்கு மண்புழு உரம் பயன்படுத்தவும், இதன்மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அந்தந்த பள்ளியில் சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கெமிக்கல் உரம் பயன்படுத்தாமல், இயற்கை உரம் மூலம் விளையும் காய்கறிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்தது என்ற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் சத்துணவு மையங்களுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.

 


Page 219 of 3988