Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர்

Print PDF

தினமணி            21.09.2016 

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர்

  மத்திய அரசின் "பொலிவுறு நகரம்' திட்டத்தின் 3-ஆவது பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 4 தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

2022-ஆம் ஆண்டுக்குள் 100 பொலிவுறு நகரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 நகரங்கள் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டன. அதில் சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 2-ஆவது கட்டமாக கடந்த மே மாதம் 13 நகரங்கள் அடங்கிய 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக நகரம் எதுவும் இடம் பெறவில்லை.

இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் 3-ஆவது பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசியும் இதில் இடம் பிடித்துள்ளது. மேற்கு வங்கம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்கள் எதுவும் இப்பட்டியலில் இல்லை. அதே நேரத்தில் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தாணே, நாசிக், நாகபுரி, கல்யாண் } டோம்பிவிலி, ஒளரங்காபாத் ஆகிய 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், உஜ்ஜைன், ராஜஸ்தானின் கோட்டா, அஜ்மீர், குஜராத்தின் வதோதரா, பஞ்சாபின் அமிருதசரஸ், லூதியானா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹுப்ளி-தார்வாட், மங்களூரு, சிவமுஹா, தும்கூரு ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சமாஜவாதி கட்சி ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் வாராணசி, ஆக்ரா, கான்பூர், பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஓடிஸாவில் தார்வாட், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, சிக்கிம் மாநிலத்தின் நாம்சி, நாகாலாந்தின் கோஹிமா ஆகிய நகரங்களும் 3-ஆவது கட்ட பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த 27 நகரங்களும் ரூ.66,883 கோடி செலவில் பொலிவுறு நகரங்களாக மேம்படுத்தப்படவுள்ளன.

"இதுவரை 60 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1,44,742 செலவில் இவை மேம்படுத்தப்படும். பொலிவுறு நகரங்களின் அடுத்த பட்டியல் 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்படும்' என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பொலிவுறு நகரங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், இணையதள வசதி, மின்னணு நிர்வாகம் உள்பட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும்.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

Print PDF

தி இந்து             20.09.2016

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான மேலும் 27 நகரங்கள்: மத்திய அரசு அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான 3-வது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி உள்ளிட்ட 27 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலை வெளியிட்ட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான போட்டியில் 63 நகரங்கள் இடம் பிடித்திருந்தன. எனினும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 3 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின் அடிப்படையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டது” என்றார்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 5 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இதுபோல தமிழ்நாடு, கர்நாடகாவின் தலா 4, உத்தரப் பிரதேசத்தின் 3, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் 2, ஆந்திரா, ஒடிசா, குஜராத், நாகாலாந்து, சிக்கிம் தலா 1 நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆக்ரா, அஜ்மிர், அமிர்தசரஸ், அவுரங்காபாத், குவாலியர், ஹூப்ளி-தார்வாட், ஜலந்தர், கல்யான்-டோம்பிவலி, கான்பூர், கோஹிமா, கோடா, மதுரை, மங்களூரு, நாக்பூர், நம்சி, நாசிக், ரூர்கேலா, சேலம், ஷிமோகா, தானே, தஞ்சாவூர், திருப்பதி, துமகூரு, உஜ்ஜயினி, வடோதரா, வாரணாசி, வேலூர் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 3-வது பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள் ஆகும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்படி, நாடு முழுவதும் 100 நகரங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நகரங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 5 ஆண்டுகளில் மத்திய அரசு தலா ரூ.500 கோடியை வழங்கும். இதே அளவு தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஒதுக்கும். மீதம் உள்ள தொகை கடன் மற்றும் இதர வகையில் திரட்டப்படும்.

இதுவரை 3 கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மொத்தம் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 60 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்த மொத்தம் ரூ.1.44 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நகரங்கள் இந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெறவில்லை.

 

உள்ளாட்சித் தேர்தல் சட்டங்கள், விதிகளை அறிந்துகொள்ள உதவும் கையேடு: மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது

Print PDF

தி இந்து          08.09.2016

உள்ளாட்சித் தேர்தல் சட்டங்கள், விதிகளை அறிந்துகொள்ள உதவும் கையேடு: மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முன், தேர்தல் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகளைத் தெளி வாக அறிந்துகொள்ள வேண்டும் என வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான கையேட்டையும் வெளி யிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்வான வர்களுக்கான பதவிக்காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடி கிறது. இதையடுத்து, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு அதிகாரி கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தேர்தல் வாக்குப்பதிவு மையங்கள், வாக்குப்பதிவு அமைவிடங்கள் போன்றவை தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையர் பெ.சீதாரா மன் மாவட்டங்களில் தேர்தல் முன்னேற் பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி முடித்துள்ளார். எனவே, விரைவில் உள் ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையில், மாநில தேர்தல் ஆணையம், செப்டம்பர் 1-ம் தேதி வரை யிலான வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் துறையிடமிருந்து பெற்றுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போதைய தேர்தலைப் பொறுத்த வரை, மாநகராட்சி, நகராட்சி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், 12 மாநகராட்சி மேயர்கள், 148 நகராட்சிகளின் தலைவர்கள், 561 பேரூராட்சிகளின் தலைவர்களை வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களே தேர்வு செய்ய முடியும். நேரடி தேர்தல் முறை கிடையாது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் மட்டுமே நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கிடையே, மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் கையேட்டை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில், வேட்பாளர்களுக்கான தகுதி, கட்டுப்பாடுகள், மனுத்தாக்கல் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அந்த தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெயர் இடம் பெற்றுள்ள வார்டு தொடர்புடைய தேர்தலில் மட்டுமே அவர் வாக்களிக்க தகுதியுடையவராவார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று வேட்பாளர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராமப் பணியாளர், மத்திய, மாநில அரசு அலுவலராகவோ, பணியாளராகவோ இருந்தால் போட்டியிட அனுமதியில்லை. மத்திய அல்லது மாநில அரசில் பதவி வகித்து, லஞ்சம் அல்லது அரசுக்குத் துரோகம் இழைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்பட்ட நாள் அல்லது சிறையில் இருந்து வெளியில் வந்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்குப் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.

வேட்பாளர் மனநலம் குன்றியவராக இருக்கக் கூடாது. போட்டியிட விரும்பும் ஊராட்சி மற்றும் எந்த ஊராட்சியிலும் வேலைக்கான, பொருள் வழங்கு வதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது. முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு அளிக்க வேண்டிய எந்த நிலுவைத் தொகையும் வைத்திருக்கக் கூடாது. தேர்தல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது என தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியிடங்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்திருந்தால், ஒரு பதவி தவிர மற்றவற்றுக்கான மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் குலுக்கல் முறையில் ஒரு பதவி தேர்வு செய்யப்பட்டு மற்றவை நிராகரிக்கப் படும். வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியை சார்ந்தவராகவோ, சுயேச்சையாகவோ இருந்தால், தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டவற்றில் 3 சின்னங்களை விருப் பத்துக் கேற்ப வரிசைப்படுத்தி கேட்கலாம்.

வைப்புத் தொகையை பொறுத்தவரை ஒரு பதவிக்கு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்தாலும் ஒரே ஒருமுறை மட்டும் வைப்புத் தொகை செலுத்தினால் போதுமானது. இவை தவிர, வேட்பு மனுக்கள் பரிசீலனை, நிராகரித்தல், மனுக்களை திரும்பப் பெறுதல், சின் னங்கள் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் இந்தக் கையேட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வேட் பாளர்கள், ஊராட்சிகள் தேர்தல் குறித்த சட்டங்கள், விதிமுறைகள், செயல்கள், நடைமுறைகள் மற்றும் அறிவுரைகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும் கையேட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Last Updated on Thursday, 08 September 2016 09:30
 


Page 23 of 3988