தினகரன் 30.12.2013
ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் 2வது நாளாக வீடுகள் அகற்றம்
துரைப்பாக்கம், : மாநகராட்சி 15வது மண்டலம் 194வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையையொட்டி உள்ள பெரிய சித்திரகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 12 வணிக வளாகங்கள் கலெக்டர் உத்தரவின்படி நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.
இதையடுத்து நேற்று தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சென்று அங்கிருந்த 20 வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தாசில்தார் ரவிச்சந்திரன் கூறுகையில், இங்கு வசித்தவர்களை தற்காலிகமாக காரப்பாக்கத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கவும், உணவு வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று இடம் கோரி மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து மேலதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வீட்டின் கூரையை அங்கு வசிப்பவர்களே அகற்றினர். இதில் ஜோசப் (40) என்பவர் தனது வீடடு கூரையை அகற்றியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.