Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் ரூ. 8½ கோடி செலவில் 5 லட்சம் பேருக்கு கொசு வலை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

மாலை மலர்                28.12.2013

சென்னையில் ரூ. 8½ கோடி செலவில் 5 லட்சம் பேருக்கு கொசு வலை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
 
சென்னையில் ரூ. 8½ கோடி செலவில் 5 லட்சம் பேருக்கு கொசு வலை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, டிச. 28 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:–

சென்னை மாநகரில் நீர்வழி தடங்களில் வசிக்கும் பொதுமக்கள் கொசு கடியில் இருந்து தப்பிக்கவும், கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் ஏற்கனவே 5 லட்சம் கொசு வலைகள் விநியோகப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 5 லட்சம் கொசுவலைகள் கொள்முதல் செய்யப்பட்டு 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.

ஒரு கொசுவலையின் விலை ரூ. 169 வீதம் ரூ. 8 கோடியே 45 லட்சம் செலவில் கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கொசு வலைகள் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும். 20 கிலோ இலவச அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொசு வலைகள் வழங்கப்படும். கொசு வலை வழங்கியதற்கான முத்திரை குடும்ப அட்டைகளில் குறிப்பிடப்படும்.

குடும்ப அட்டை இல்லாத நீர்வழி பாதை ஓரங்களில் வசிப்பவர்களுக்கும் கொசு வலை வழங்கப்படும்.

மேலும் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ–மாணவிகள், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கும் கொசு வலைகள் இலவசமாக வழங்கப்படும்.

கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி சிறப்பு தீர்மானங்களை கொண்டு வந்து அவற்றின் மீது பேசியதாவது:–

முதல்–அமைச்சர் உத்தரவுப்படி சென்னையில் ஆயிரம் இடங்களில் மாபெரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடந்த 5–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் நோய்கள் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் நடைபெற்றது.

இந்த முகாம்கள் மூலம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 993 பேர் பயன் அடைந்தனர். இதற்காக ரூ.3 கோடி மாநகராட்சி செலவிட்டு உள்ளது.

மாநகராட்சியின் பொது சுகாதார துறையின் மேலான நடவடிக்கை மூலம் மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 2005–ம் ஆண்டு 25 ஆயிரத்து 153 பேருக்கு மலேரியா பாதிப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4665 ஆக குறைந்து உள்ளது. 131 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்து மேயர் சைதை துரைசாமி பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா 78 ஆயிரத்து 116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 4500 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என பதிவு செய்து உள்ளனர்.

இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. அல்ல என்பதை மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். ஏற்காடு மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதோடு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்த மன்றம் பாராட்டு தெரிவித்து கொள்கிறது என்று கூறினார்.

இதை தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சினிமா போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்படும்

Print PDF

தினகரன்           28.12.2013

சினிமா போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்படும்

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி மாதாந்திர கூட்டம் சேர்மன் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 33 கவுன்சிலர்கள் உள்ள போதும் 15 பேர் மட்டும் குறிப்பட்ட நேரத்திற்கு வந்ததால் அறை மணி நேரம் தாமதமாக கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்ய புதிய ஜெனரேட்டர், சாலை, குடிநீர் பம்ப் மோட்டார் வாங்குவது உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகள்:

அதிமுக நகரமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ்: திண்டிவனத்தில் மறைந்த அரசியல் தலைவர்கள் சிலைகள் பல இருந்தபோதும், எம்ஜிஆர் சிலை வைக்கப்பட வில்லை. நகர மையப்பகுதியில் ஆய்வு செய்து நகராட்சி மூலம் திருவுருவ சிலை நிறுவ வேண்டும்.

அதிமுக நகரமன்ற உறுப்பினர் சுதாகர்: திண்டிவனம் நகரில் பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச போஸ்டர்கள், விளம்பர பலகைகள் வைப்பதை நகராட்சி தடை செய்ய வேண்டும். கல்வி நிலையம் அருகே உள்ள மதுபான கடைகளை மூடவேண்டும்.

சமீபகாலமாக வாகன திருட்டு, தொடர் கொள்ளைகள், சமூக விரோத செயல்களால் திண்டிவனம் நகர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே பாதுகாப்புக்காக கூடுதல் போலீஸ் நியமிக்க வேண்டும்.

அதிமுக நகரமன்ற உறுப்பினர் பாலசந்திரன்: காவிரி நதிநீர், டெல்டா விவசாயிகள் பிரச்னை மற்றும் மின் பற்றாக்குறைகளை பற்றி பேசுவதற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு 10 நிமிடம் மட்டும் கொடுத்த மத்திய காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பாமக நகரமன்ற உறுப்பினர் ஜெயராஜ்: திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் எங்கு அமையும்.

சேர்மன் வெங்கடேசன்: வக்ப் போர்டு இடத்தில் நகராட்சி மூலம் மீண்டும் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

ஆபாசம் மற்றும் அங்கங்கே சினிமா போஸ்டர்கள் ஒட்டுவது, திருமண மண்டபங்களில் இருந்து இலை, குப்பைகளை தெருவில் கொட்ட தடைவித்து நோட்டீஸ் அனுப்பப்படும்.

2013 புதுவருடத்தில் நகரை தூய்மைப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கு புது வருட வாழ்த்துகள். 

 

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

Print PDF
தினமணி             28.12.2013

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு அவைகளுக்கு கருத்தடை செய்ய கொண்டு செல்லப்பட்டது.

பெருகிவரும் தெருநாய்கள் தொல்லை தொடர்பான புகாரைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தெருநாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள ஹேண்ட்ஸ் பார் அனிமல் சேரிடபிள் அமைப்பின் சார்பாக மருத்துவர்கள் மகேந்திரன், கோபி கிருஷ்ணா, செயலாளர் ரஞ்சித்குமார், உதவியாளர்கள்  பிரான்சிஸ், ரஞ்சித் ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

9 வார்டுகளில் 63 நாய்கள் பிடிக்கப்பட்டு மீஞ்சூரில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்த நாய்கள் ஒரு வாரம் கழித்து எங்கு பிடிக்கப்பட்டதோ அங்கு கொண்டு வந்து விடப்படும் என்றும் பிற வார்டுகளிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவைகளுக்கும் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோ.மணிவேல் தெரிவித்தார்.
 


Page 238 of 3988