Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.156 லட்சம்! உள்ளாட்சிகள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கட்ட குடிநீர் வடிகால் வாரியம் அறிவுரை

Print PDF

தினமலர்             16.12.2013

ரூ.156 லட்சம்! உள்ளாட்சிகள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக கட்ட குடிநீர் வடிகால் வாரியம் அறிவுரை

பொள்ளாச்சி:ஊராட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.156 லட்சம் குடிநீர் கட்டண தொகையை செலுத்தாமல், நிலுவையில் வைத்துள்ளன. இத்தொகையை செலுத்த குடிநீர் வாரிய அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில், கோட்டூர் -வேட்டைக்காரன்புதூர் கூட்டுக்குடிநீர் திட்டம், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் என மூன்று குடிநீர் திட்டங்கள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் மூலம், ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, வேட்டைக்காரன் புதூர், ஆனைமலை, ஒடையகுளம், கோட்டூர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகளும்; கிணத்துக் கடவு தாலுகாவில் உள்ள ஒன்றியம், பேரூராட்சி, பெரிய நெகமம் பேரூராட்சி, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

புதூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீரும், சூளேஸ்வரன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 65 லட்சம் லிட்டர் குடிநீரும், 295 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில், தினசரி 250 லட்சம் லிட்டர் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு குடிநீர் திட்டத்திலும், குறிப்பிட்ட பகுதிகளில்,"நீரேற்று நிலையம்' அமைக்கப்பட்டு, கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீரை கிராமங்களில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு, ஊராட்சி நிர்வாகம், கிராம மக்களுக்கு வினியோகிக்கிறது.

தினசரி 23 மணிநேரம் செயல்படும் வகையில் இத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் ஆயிரம் லிட்டர் குடிநீருக்கு, மூன்று ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

ஆண்டிற்கு ஆறு கோடி

குடிநீர் வடிகால் வாரியத்தில், கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு மின்சார தேவை அவசியமானதாக உள்ளது. இதற்காக, மாதத்திற்கு ரூ.50 லட்சம் வீதம் ஆண்டிற்கு ஆறு கோடி ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.

கூடுதல் செலவு

தற்போது மின்தடை ஏற்படுவதால், குடிநீர் முறையாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க, நீரேற்று நிலையங்களில்,"ஜெனரேட்டர்' உதவியுடன், மோட்டார்கள் இயக்கப்பட்டு, குடிநீர் தடையின்றி வழங்கப்படுகிறது.

இதற்காக கடந்த ஒரு ஆண்டு மட்டும், ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மின்தேவைக்காக மட்டும் ஆண்டிற்கு, 7 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.

நிலுவைத்தொகை


குடிநீர் திட்டங்கள் முறையாக குடிநீர் வினியோகிக்க, மின்சாரத்திற்கு மட்டும் 7.50 கோடி ரூபாய் செலவாகிறது.

இவ்வாறு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு முறையாக உள்ளாட்சி நிர்வாகங்கள், அரசு அலுவலகங்களும் கட்டணம் செலுத்துவதில்லை. இதனால், நிலுவையில், பல லட்சம் ரூபாய் கட்டணம் உள்ளது.

மூன்று கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 130 கிராமங்கள், 8 பேரூராட்சிகள், 11 தனியார் இணைப்புகள் (பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்டவை) என மொத்தம் 149 பயனாளிகள், 41லட்சமும்; ஆச்சிப்பட்டி, ராசி செட்டிபாளையம் இரண்டு ஊராட்சிகளும், மாக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதிக்கு வழங்கப்படும் குடிநீருக்கு கட்டணமாக செலுத்த வேண்டிய 115 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. மொத்தம் 156 லட்சம் ரூபாய் உள்ளாட்சி நிர்வாகங்கள் செலுத்த வேண்டும்.

குடிநீர் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டுமென்றால், உள்ளாட்சி நிர்வாகங்கள் முறையாக குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு கோட்டம் உதவி செயற் பொறியாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில்,"குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தாததால், 156 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. இதனை முறையாக செலுத்தினால், குடிநீர் திட்டத்தில் தடையின்றி குடிநீர் வினியோகிக்க முடியும். எனவே, நிலுவையில் உள்ள தொகையை உடனே செலுத்த முன்வரவேண்டும்,'' என்றார்.

 

மழைநீர் வடிகால்வாய்களை தூர்வார புதிய இயந்திரம் சோதனை முறையில் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்             16.12.2013

மழைநீர் வடிகால்வாய்களை தூர்வார புதிய இயந்திரம் சோதனை முறையில் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்

சென்னை: மனிதர்களால் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்படுவதை தவிர்க்கும் வகையில், அந்த பணிகளை சோதனை முறையில் புதிய இயந்திரங்களை கொண்டு மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

விஷவாயு அபாயம்சென்னை மாநகராட்சியில், 2,000 கி.மீ., தூரத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய, ஆள் நுழைவு குழிகள் வழியாக மனிதர்கள் இறங்கி, சுத்தம் செய்யும் நிலை தற்போது உள்ளது.வெள்ளபாதிப்பை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதல், மழைநீர் வடிகால்வாய்கள், ஆண்டிற்கு இரண்டு முறை தூர்வாரப்படுகின்றன.

அந்த பணிகள், சுகாதார பணியாளர்கள் மூலம் செய்யப்படுகின்றன.தற்போது, சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.இதை தவிர்க்கும் வகையில், இனி, மழைநீர் வடிகால்வாய்களை, இயந்திரங்களை கொண்டு தூர்வார மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்காக, சோதனை முறையில், 'ஸ்லட்ஜ்டு பம்ப்' என்ற புதிய இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு, மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.தற்போது, இரண்டு இயந்திரங்கள் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளன. ஒரு இயந்திரத்தின் விலை, 10 லட்சம் ரூபாய்.வெற்றிகரமாக இயந்திரம் செயல்படும் பட்சத்தில், வார்டுக்கு ஒரு இயந்திரம் வாங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அனைத்து வார்டுகளும்இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய இயந்திரம் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இது சாத்தியப்படாத பட்சத்தில், வேறு இயந்திரங்கள் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படும்.

நீடித்து உழைக்கவும், மழைநீர் வடிகால்வாய்களை எளிதில் சுத்தம் செய்யவும் ஏற்ற இயந்திரம் கண்டறியப்பட்டு, அனைத்து வார்டுகளுக்கும் வாங்கி தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

அம்மா' உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம்

Print PDF

தினமலர்             16.12.2013

அம்மா' உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம்

தமிழக அரசு நடத்தி வரும், அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை உரிமம் கோரி, விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஒரு வாரத்தில் உரிமம் கிடைக்கும் என, தெரிகிறது.

200 இடங்களில்

சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. ஐந்து ரூபாய்க்கு, பொங்கல், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதங்கள், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதம்; ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது.குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விரைவில், மூன்று ரூபாய்க்கு, இரண்டு சப்பாத்தி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிற மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம், செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது.

பிற மருத்துவமனைகளிலும், அம்மா மலிவு விலை உணவகம் திறக்க முயற்சி நடந்து வருகிறது.இந்நிலையில், அம்மா உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை மூலம், முறையான உரிமம் பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.முதற்கட்டமாக, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு உரிமம் கோரப்பட்டு உள்ளது. இதன்படி, 108 உணவகங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் செலுத்தி, மாநகராட்சி விண்ணப்பித்து உள்ளது.

ஒரு வாரத்தில்இந்த விண்ணப்பங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள், உரிமம் கிடைக்கும் என, தெரிகிறது.படிப்படியாக, சென்னையில் உள்ள பிற அம்மா உணவகங்கள், பிற மாநகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறப்படும் என, தெரிகிறது.ஓட்டல், உணவகம் உள்ளிட்ட உணவு சார்ந்த வியாபாரிகள், உணவு பாதுகாப்புத் துறையின் கீழ், பதிவு செய்தல், உரிமம் பெறுதல், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதன்படி, பதிவு செய்யவும், உரிமம் பெறவும், வியாபாரிகள் சுணக்கம் காட்டி வரும் நிலையில், அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, முன்மாதிரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 


Page 253 of 3988