தினகரன் 13.12.2013
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட அரசு அலுவலகம், பூங்கா சுவர்களில் அழகிய ஓவியங்கள்
கோவில்பட்டி, : கோவில்பட்டியில் நகராட்சி பூங்கா உள்ளிட்ட நகராட்சிக்குட்பட்ட அலுவலக சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகம், பசுவந்தனை ரோட்டில் உள்ள நகராட்சி ராஜாஜி பூங்கா, அண்ணா பஸ்நிலையம், ராமசாமிதாஸ் பூங்கா மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட அலுவலக சுவர்களில் விளம்பர வால்போஸ்டர், சினிமா போஸ்டர்களின் ஆக்கிரமிப்பினால் சுவர்கள் பொலிவிழந்து காணப்பட்டன.
இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட அலுவலகம் மற்றும் பூங்காக்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றிவிட்டு ஓவியங்களை வரைய நகராட்சி கமிஷனர் சுல்தானா உத்தரவிட்டார். இதையடுத்து சுவர்களில் உள்ள போஸ்டர்ள் அகற்றப்பட்டது. பின் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபூங்கா, ராமசாமிதாஸ் பூங்கா, அண்ணா பஸ்நிலையம் மற்றும் அனைத்து அலுவலக சுவர்களிலும் வண்ணமிகு ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.
இதில் பறவைகள், விலங்குகள், மலர்கள், நிலத்தில் விவசாயி மாடுகளை பூட்டி ஏர் உழும் காட்சி, கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கிராமங்களில் அன்றைய காலங்களில் வீட்டின் முன்பு தானியங்களை வெயிலில் உலர வைத்திருக்கும்போது, அதனை ஏதாவது பறவைகள் வந்து கொத்தி தின்ன முயலும்போது, வீட்டுமுன்பு காவல் காக்கும் மூதாட்டிகள் தங்கள் காதில் அணிந்திருக்கும் தங்க பாம்படத்தை கழற்றி, தானியத்தை கொத்தி தின்னும் பறவைகள் மீது வீசுவதுபோன்ற தத்ரூபமாக காட்சிகளும், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, நீதிகேட்டு மணியோசை எழுப்பி மனுநீதி சோழனிடம் நீதிகேட்டும் பசு என பல்வேறு நன்னெறி கதைகளை நினைவூட்டும் வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரைப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்களை பார்த்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.