Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்' மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

Print PDF

தினமலர்              11.12.2013

படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்' மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

 படமும், பாடமும்! பாடத்திட்டத்துடன் "ஸ்மார்ட் கிளாஸ்'  மாநகராட்சி பள்ளியில் அறிமுகம்

கோவை :கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியும், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷனும் (ஏ.ஐ.எப்.,) இணைந்து, மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, "டேப்லெட் கம்ப்யூட்டர்' வழங்கி, ஆசிரியர்கள் "சைகை' மொழியில் கல்வி போதிப்பதை, கையடக்க "டேப்லெட் கம்ப்யூட்டரில்' வழங்கியுள்ளது.

அதேபோன்று மற்ற வகுப்பு மாணவர்களுக்கும், கல்வி கற்கும் முறையை எளிமைப்படுத்த "ஏ.ஐ.எப்' திட்டமிட்டது. வகுப்பறையில் கரும்பலகையில் எழுதி, கல்வி போதிக்கும் நிலையை மாற்றி, மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை புரிய வைக்க "ஸ்மார்ட் கிளாஸ்' முறையை அறிமுகம் செய்துள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் பாடங்களை, ஆசிரியர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்துவதை பதிவு செய்து, தேவையான படங்களை இணையதளத்தில் தேடி பிடித்து, எடிட்டிங் செய்து, கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

"ஸ்மார்ட் கிளாஸ்' பாடங்களை மாணவர்களிடம் முன்கூட்டியே ஒப்படைத்து, கற்பிக்கின்றனர். அதன்பின், வழக்கம் போல், ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தும் போது, பாடத்திட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று, தெளிவுபடுத்திக் கொள்கின்றனர்.

"ஸ்மார்ட் கிளாஸ்'க்கு பிறகு, மாணவர்கள் குழு விவாதம் செய்கின்றனர். இறுதியாக ஆசிரியர் பாடம் நடத்தும்போது, மிகவும் எளிதாக கல்வி கற்கின்றனர்.

ஏ.ஐ.எப்., மாநில ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் கூறுகையில், ""மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு பாடங்களை "ஸ்மார்ட் கிளாஸ்' முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது, அனுப்பர்பாளையம், குப்பக்கோணாம்புதூர், மணியகாரம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் "பைலட்' திட்டமாக "ஸ்மார்ட் கிளாஸ்' துவங்கியுள்ளோம்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியலில் தலா இரண்டு பாடங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "ஸ்மார்ட் கிளாஸ்' மூலமும், சாதாரண வகுப்புகள் மூலமும் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித்திறன் சோதிக்கப்படுகிறது. அடுத்த பருவத்தில், மாநகராட்சியில் உள்ள 26 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' துவக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் சுய கற்றல், குழு விவாதம், பாடம் சார்ந்த அறிவு மேம்படும்'' என்றார்.

எளிதானது கற்றல், கற்பித்தல்!

கோவை அனுப்பர்பாளையம் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மகேந்திரகுமார் கூறுகையில், ""பாடப்புத்தகத்தை பார்த்து, கரும்பலகையில் எழுதி பாடம் நடத்தும்போது, மாணவர்கள் அதை எழுதி வைத்து படிக்கின்றனர். இந்த முறையில் கம்ப்யூட்டர் மூலம், செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்தும் போது, மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுகிறது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எளிதாக உள்ளது'' என்றார்.

  • தமிழ் ஆசிரியர் ஜாய் விமலா கூறுகையில், ""தமிழ் இலக்கணப்பகுதியை எத்தனை முறை கற்றுக்கொடுத்தாலும் மாணவர்கள் சிரமமாக கருதுகின்றனர். "ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் இலக்கணம் படிக்கும்போது, எளிதாக புரிந்து கொள்கின்றனர். சந்தேகம் ஏற்பட்டால் வீடியோ பார்த்து தெளிவுபடுத்தி கொள்கின்றனர்'' என்றார்.
  • 7ம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் கூறுகையில், ""பள்ளிக்கு விடுப்பு எடுத்தாலும், அடுத்த நாள் வந்து கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த பாடத்தை கற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் விடுப்பில் இருந்தாலும், பதிவு செய்து வைத்துள்ள பாடங்களை படித்துக்கொள்ளலாம். இந்த முறையில் கல்வி கற்க ஆர்வமாகவும், எளிதாகவும் உள்ளது'' என்றார். 
Last Updated on Wednesday, 11 December 2013 07:33
 

வேலூர் பகுதிகளில் மாநகராட்சி மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினத்தந்தி              11.12.2013

வேலூர் பகுதிகளில் மாநகராட்சி மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேயர் திடீர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியான 16 மற்றும் 30–வது வார்டுகளில் கால்வாய் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி போன்றவை குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி கவுன்சிலர்கள் மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோருக்கு புகார்கள் கொடுத்தனர்.

அதன்படி நேற்று மாலை மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் நேற்று திடீரென அந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது துணைமேயர் வி.டி.தருமலிங்கம், நகரமைப்பு அலுவலர் கண்ணன், நகர்நல அலுவலர் வசந்த்திவாகர், கட்டிட ஆய்வாளர் மதிவாணன், கவுன்சிலர்கள் தாமோதரன், அன்வர்பாஷா உள்பட மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

16–வது வார்டான காகிதப்பட்டரை ஆற்காடு சாலை, நைனியப்பன் நாய்க்கர் தெரு, கானாறு, சைதாப்பேட்டை கன்னாரத்தெரு ஆகிய பகுதிகளில் மேயர், கமிஷனர் பார்வையிட்டனர். மேலும் காகிதப்பட்டறையில் மலையில் இருந்து வரும் மழைநீர்வடிகால் கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டனர். அந்த பகுதிகளில் கால்வாய் வசதி இல்லாமல் உள்ளதாகவும் அதனை சீரமைக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகள்

அதைத்தொடர்ந்து 30–வது வார்டு பழைய முன்சீப் கோர்ட்டு தெரு, கானாறு, பி.டி.சி.ரோடு, சின்ன மராட்டா தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கால்வாய் கட்டும் பணியையும், சின்னமராட்டா தெருவில் ரூ.35 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கால்வாய்களை தூர்வாரவும், பி.டி.சி. ரோட்டில் சாலையில் ஆக்கிரமித்து மரப்பலகைகள், கதவுகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் மேயர் கார்த்தியாயினி உத்தரவிட்டார்.

குடிநீர் பிரச்சினை

ஆய்வின்போது மேயர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு மேயர் கூறுகையில், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டு குடிநீர் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 9–ந் தேதி வெள்ளோட்டம் பார்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

Last Updated on Thursday, 12 December 2013 11:39
 

திண்டலில் 10ம் தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினகரன்              10.12.2013

திண்டலில் 10ம் தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேசிய மக்கள்தொகைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் 10ம்தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்குகிறது. திண்டல் 1 முதல் 6வது பிளாக் வரை உள்ள காரப்பாறை, புதுக்காலனி, அக்னிநகர், பங்காருநகர், வித்யாநகர், ஐத்தரியா அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு காரப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10ம்தேதி முதல் 15ம்தேதி வரையும், 7 முதல் 12வது பிளாக் வரை உள்ள மேல் திண்டல், கீழ் திண்டல், அருள்நகர், முருகன்நகர், கணபதிநகர், டி.ஆர்.கார்டன், சக்திநகர், கலைமகள் நகர் ஆகிய பகுதிகளுக்கு 16ம்தேதி முதல் 20ம்தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது.

 13 முதல் 18வது பிளாக் வரை உள்ள கே.ஏ.எஸ்.நகர், சத்தியசாய்நகர், பால்காரர் தோட்டம், ராஜீவ்நகர், ராஜா கார்டன், செங்கோடம்பாளையம், அம்மன்நகர், வள்ளியம்மை நகர் ஆகிய பகுதிகளுக்கு 21ம்தேதி முதல் 25ம்தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது. 19 முதல் 25வது பிளாக் வரை உள்ள செல்வம்நகர், ஸ்ரீநகர், சாமுண்டிநகர், அரவிந்த்நகர், பெரியார் காலனி, காலாஜி கார்டன், மாணிக்கம்பாளையம், நல்லியம்பாளையம், லட்சுமிநகர், லட்சுமி கார்டன், சரவணாநகர், எஸ்.டி.எஸ்.கார்டன், தெற்குபாளையம் ஆகிய பகுதிகளுக்கு 26ம்தேதி முதல் 31ம் தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது.

 புகைப்படம் எடுக்கும் பணி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2010ம்ஆண்டு மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் அதற்கான பதிவுசீட்டுடன் வந்து உரிய மையத்தில் தேசிய மக்கள்தொகைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 262 of 3988