தினகரன் 10.12.2013
ஓமலூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சட்டை அணிய அனுமதி
ஓமலூர், : நவநாகரீக காலத்திலும் அரைக்கால் சட்டை (டிராயர்) அணிந்து கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்காட்டி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியால் துப்புரவு பணியாளர்களுக்கு புதிய பேண்ட், சர்ட் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகள், மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 120 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் காலம் காலமாக அரைக்கால் சட்டையுடன் துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். அரைக்கால் சட்டை அணிந்து பணியாற்றுவது இவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பு வயதினரும் ஈடுபட்டுள்ளதால், அரைக்கால் சட்டையுடன் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருவது சங்கடத்தை ஏற்படுத்தியது.
இவர்கள், மற்றவர்களை போல பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்ற விரும்பினர். இதுகுறித்த செய்தி, தினகரன் நாளிதழில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியியானது. இதனை தொடர்ந்து இந்த நிலையை மாற்ற ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்ற அனுமதி அளித்ததோடு, அதை வாங்கியும் கொடுத்துள்ளது. தற்போது ஓமலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்ற பணியாளர்களை போல காக்கி கலர் பேண்ட், சர்ட் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.