தினமணி 09.12.2013
சொத்து வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு
திண்டுக்கல் நகராட்சி பகுதியில் சொத்துவரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நகராட்சியில் ரூ.1.25 கோடி வரை வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இதனை அடுத்து நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மூலம் பாக்கித் தொகையை வசூலித்து வருகின்றனர்.
அதன்படி வரி செலுத்தாத கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
வரி செலுத்தாத நபர்களை ஏ, பி, சி என 3 வகையாக பிரித்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.10,000க்கு மேல் வரி பாக்கி உள்ளவர்கள் ஏ பிரிவிலும், ரூ.5000 முதல் ரூ.10,000 வரை பி பிரிவிலும், ரூ.5000க்கு கீழ் சி பிரிவு என வகைப்படுத்தி வரி வசூல் நடைபெற்று வருகிறது.
ஏ பிரிவில் உள்ள 80 பேரில், நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் 40க்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.40 லட்சம் வரிபாக்கி உள்ளது. அதேபோல் பி பிரிவிற்குள்பட்டோரிடமிருந்து இதுவரை ரூ.6 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மேலும் ரூ.12 லட்சம் நிலுவையில் உள்ளது.
சி பிரிவைப் பொறுத்தவரை இதுவரை ரூ.35 லட்சம் வரி பாக்கியுள்ளது. அந்தப் பணத்தை வசூலிக்க, வருவாய்த்துறையோடு, பொறியாளர் பிரிவும் இணைந்து செயல்படுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை புதன்கிழமை முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் கே. மணிகண்டன், பி. சுரேஷ் ஆகியோரிடம் கேட்டபோது, நகராட்சிப் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டின் உரிமையாளர் வரி செலுத்துவார் என விட்டு விடுகின்றனர். ஆனால் உரிமையாளரோ, குடியிருப்பவர் செலுத்துவர் என வரி கட்டுவதில்லை. இதனால் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் அதிகப்படியான தொகை நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது என்று தெரிவித்தனர்.