Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வர்த்தக விளம்பரங்கள் அகற்றம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர்         06.12.2013

வர்த்தக விளம்பரங்கள் அகற்றம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கோவை:கோவை மாநகர எல்லைக்குள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த வர்த்தக விளம்பரங்களை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகர எல்லைக்குள் அனைத்து ரோடுகளில், ரோட்டின் இரு பக்கமும் தனியார் வர்த்தக விளம்பரங்கள், கண்கவர் வண்ண விளக்குகளுடன் வைக்கப்பட்டன. ரோட்டோரங்களிலும், தனியார் கட்டடங்களிலும் வர்த்தக விளம்பரங்கள் புற்றீசல் போன்று முளைத்தன.

நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் கண்கவர் விளம்பரம் செய்வது, விபத்துகளுக்கு வழிவகுப்பதால், விளம்பரங்கள் வைக்க சுப்ரீம் கோர்ட் ஆட்சேபனை தெரிவித்தது. மேலும், இந்திய சாலைக்குழும விதிகளுக்கு முரணாக ரோட்டின் மையத்திலும், ரோட்டோரத்திலும் விளம்பரங்கள் வைக்கப்பட்டன.

"அனுமதி விளம்பரம் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்; தனியார் கட்டடங்கள் மேல்தளத்தில் அனுமதியின்றி விளம்பரம் வைத்தால், கட்டடத்துக்கு வர்த்தக ரீதியாக வரி விதிக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, ரோட்டின் மையத்தடுப்பில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டன. ரோட்டோர விளம்பரங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி காலாவதியானதும், அவற்றை உடனடியாக அகற்ற, முந்தைய கலெக்டர் உத்தரவிட்டார்.

கலெக்டர் மாற்றத்துக்கு பின், மீண்டும் விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு தலைதூக்கியது. ரோட்டின் மையத்தடுப்பில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டாலும், ரோட்டோரங்களை ஆக்கிரமித்துள்ள விளம்பரங்கள் அகற்றப்படவில்லை. தனியார் கட்டடங்களிலும் விளம்பரங்கள் முளைத்தன. இது குறித்து, "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் உத்தரவின்படி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், மாநகர எல்லைக்குள் இருக்கும் வர்த்தக விளம்பர போர்டு மற்றும் பிளக்ஸ் விளம்பரங்களை, இரண்டு நாட்களாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி ஐந்து மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 147 வர்த்தக விளம்பரங்களை நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அகற்றியுள்ளனர். தனியார் கட்டடங்களில் வர்த்தக விளம்பரம் வைத்தால், சொத்துவரி விதிப்பு வகை மாற்றம் செய்யப்படும் என, கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மாநகருக்கு வெளியில்...

கோவை மாநகராட்சியின் தொடர் நடவடிக்கைகளால், வர்த்தக விளம்பரங்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளன. ஆனால், மாநகர எல்லையை கடந்ததும், முக்கிய ரோடுகளில், விளம்பரங்களின் ஆக்கிரமிப்பு அதிகமுள்ளது. ரோட்டோரத்திலும், விவசாய நிலங்களிலும், தனியார் கட்டடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்ற, கலெக்டர் உத்தரவிட வேண்டும். 

 

பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு நோட்டீஸ் முழுமை பெறாத முதல்வர் நிதி பணிகள்

Print PDF

தினமலர்         06.12.2013

பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு நோட்டீஸ் முழுமை பெறாத முதல்வர் நிதி பணிகள்

மதுரை:மதுரை மாநகராட்சிக்கு முதல்வர் ஜெ., ஒதுக்கிய ரூ.250 கோடி நிதியில் தொடங்கிய எந்த பணியும், முழுமை பெறவில்லை. இந்நிலையில், பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆட்சியில், ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில், மழைநீர் வடிகால் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 50 சதவீதம், மாநில அரசின் 30 சதவீதம் நிதியுடன், மாநகராட்சியின் பங்களிப்புத் தொகையான, 20 சதவீதம்(ரூ.300 கோடி) நிதி செலுத்தாததால், அனைத்து பணிகளும் பாதியில் நின்றது.

ஆட்சி மாற்றத்திற்கு பின், ரூ.116 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். பின், முழு நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக, மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிகாரிகள், பலமுறை தெரிவித்தனர்.

துவக்கம் முதலே, அனைத்து திட்ட பணிகளையும் ஒரே நேரத்தில் தொடங்கினர். கண்காணிப்பிற்கும், தரத்திற்கும் முரண்பாடாக அது தெரிந்தது. தவிர, அப்பணிகளை, வாரந்தோறும் பார்வையிட அமைக்கப்பட்ட, நகராட்சிகளின் நிர்வாக அலுவலக சென்னைக் குழு, ஒரு கட்டத்திற்கு மேல், மதுரைக்கு வரவில்லை.

பணிகளின் நிலை புதிராகவும், விடையில்லாமலும் தொடர்ந்தது. அதிகாரிகள் தரப்பிலும், பணிகளை பற்றி மூச்சுவிடவில்லை. வேறு வழியில், அத்தகவல்களை திரட்டிய போது, "முதல்வரின் சிறப்பு நிதியில் தொடங்கிய எந்த பணியும், நிறைவு பெறவில்லை,' என தெரியவந்துள்ளது.

பாதாளச் சாக்கடை பணிகள் படுமோசமாக நடந்து வருவதால், "அவற்றை விரைந்து முடிக்க, ஒப்பந்தகாரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் ஒதுக்கிய நிதிக்கே, இந்த கதி என்றால், பிற நிதிகளில் நடக்கும்

முதல்வர் சிறப்பு நிதியில் நடந்து வரும் பணிகள் குறித்த நாம் கேட்ட கேள்விகளுக்கு, மாநகராட்சி அளித்துள்ள பதில்கள், "நடக்கிறது... முடிந்துவிடும்...' இவை, இரண்டு மட்டுமே. "முடிந்துவிட்டது' என்ற பதில், ஒரு இடத்தில் கூட வரவில்லை.

இதோ, மாநகராட்சி அளித்த பதில்கள்:

பாதாளச் சாக்கடைத் திட்டம் பகுதி 3ல் விடுபட்ட பகுதிகளில், பாதாளச் சாக்கடை அமைக்கவும், ஏற்கனவே உள்ள அமைப்பை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மழைநீர் வடிகால் திட்டம் சிப்பம் 1, 5 ஆகியவை,"முடிந்து'விடும் தருவாயில் உள்ளது.

மழைநீர் வடிகால் திட்டம் 2, 3, 4, 6 ஆகியவை, நடந்து வருகிறது.

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

மழைநீர் வடிகால் திட்டத்தின் ஒப்பந்தகாரர்களுக்கு, அனைத்து பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

திமிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Print PDF

தினத்தந்தி          06.12.2013

திமிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திமிரியில் வேலூர் மாவட்ட கலெக்டர், மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சல், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு ஆகியவவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமலை நாடக குழுவினரால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கி, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 


Page 273 of 3988