Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

விதிமீறல் கட்டட 'சீல்' அகற்றியவர் மீது புகார்

Print PDF

தினமலர்           05.12.2013 

விதிமீறல் கட்டட 'சீல்' அகற்றியவர் மீது புகார்

மடிப்பாக்கத்தில் விதிமீறல் கட்டடத்துக்கு வைக்கப்பட்ட 'சீல்' அனுமதி இன்றி அகற்றப்பட்டது குறித்து, போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கம் பஜார் சாலையில் மனை எண், 7,8 ஆகியவற்றுக்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட, மூன்று மாடி வணிக கட்டடத்தில், விதிமீறல் இருப்பதாக, கடந்த நவ.,27ம் தேதி, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அனுமதி இன்றி 'சீல்' அகற்றப்பட்டதாக புகார் எழுந்தது.

அதன் எதிரொலியாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கட்டடத்தின் தற்போதைய நிலை குறித்த புகைப்பட ஆதாரங்களை சேகரித்தனர்.

அதுகுறித்த அறிக்கை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது அனுமதி கிடைத்தவுடன், போலீசில் புகார் செய்ய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

 

இன்று முதல் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள்

Print PDF

தினமணி           05.12.2013

இன்று முதல் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தலா 5 இடங்களில் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள் டிச. 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது இந்த முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் வியாழக்கிழமை முதல் 5 நாள்களுக்கு நடைபெறும்.

இந்த முகாம்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இதனை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் செனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர்.

ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பிரதான முகாம் நடத்தப்படும். இதில் எக்கோ, இ.சி.ஜி. அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், மார்பக சோதனை, காசநோய் பரிசோதனை, பல் மருத்துவ சிகிச்சை, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மேலும் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் ரத்தப் பரிசோதனை, காசநோய் மற்றும் மலேரியா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

பிரதான முகாம் நடைபெறும் இடங்கள்:மண்டலம் - இடம்

திருவொற்றியூர் - கத்திவாக்கம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 2)

மணலி - மணலி சென்னை மாநகராட்சி பள்ளி (வார்டு 21)

மாதவரம் - மாதவரம் ராஜாஜி சாலை மாநகராட்சி தொடக்கப்பள்ளி (வார்டு 30)

தண்டையார்பேட்டை - பட்டேல் நகர் மாநகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி (வார்டு 38)

ராயபுரம் - பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்ட முதலி 8 ஆவது தெரு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 51)

திரு.வி.க. நகர் - ஓட்டேரி, ஸ்டாஹன்ஸ் சாலை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 76)

அம்பத்தூர் - பாடி மூர்த்தி நகர் மாநகராட்சி பள்ளி (வார்டு 87)

அண்ணாநகர் - செனாய் நகர் புல்லா அவென்யூ மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (வார்டு 102)

தேனாம்பேட்டை - எல்டாம்ஸ் சாலை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 123)

கோடம்பாக்கம் - கோயம்பேடு பள்ளி சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (வார்டு 127)

வளசரவாக்கம் - போரூர் ஸ்ரீóராமச்சந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனை (வார்டு 151)

ஆலந்தூர் - நங்கநல்லூர் மாநகராட்சி பள்ளி (வார்டு 166)

அடையாறு - திருவான்மியூர் பாரதிதாசன் தெரு (வார்டு 182)

பெருங்குடி - மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குளக்கரை தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி (வார்டு 188)

சோழிங்கநல்லூர் - கண்ணகி நகர் இசபெல் நல மையம் (வார்டு 195)

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் அறிவிப்பு: மேலும் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து தினமும் காலையில் ஆட்டோவில் சென்று அறிவிக்கப்படும்.

இது குறித்த துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் வரவேற்புக்கு ஏற்ற வகையில் பிரதான முகாம்கள் நடைபெறும் இடங்களும் மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நான்கு மாசி வீதிகளில் சாக்கடை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும்: அலுவலர்களுக்கு மேயர் உத்தரவு

Print PDF

தினமணி           04.12.2013

நான்கு மாசி வீதிகளில் சாக்கடை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும்: அலுவலர்களுக்கு மேயர் உத்தரவு

நான்கு மாசி வீதிகளிலும் நடைபெறும் பாதாளச் சாக்கடை பணியால், சாலைகளில் சாக்கடை தேங்காதவாறு தினமும் கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அகற்ற வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா உத்தரவிட்டார்.

மாநகராட்சி தெற்கு மண்டலம் கூடலழகர் பெருமாள் கோவில் தெற்கு மாட வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் ஓடிவருகிறது. இதனால் அப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆணையர் கிரண் குராலா தலைமையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார்.

இந்த அடைப்புகளை 2 நாளில் சீர்செய்து கழிவு நீர் பாதாள சாக்கடையில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். மேலும் அவர் கூறுகையில், 2 நாள்களில் இந்த அடைப்பை சரிசெய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான்கு மாசி வீதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடியும்வரை, முந்தைய சாக்கடைகள் நிரம்பி சாலைகளில் தேங்காதவாறு உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தினமும் கழிவுநீர் உறிஞ்சு வாகனம் மூலம் மேனுவல்களில் கழிவுநீரை உறிஞ்சி அப்புறப்படுத்த வேண்டும். இப் பணிக்கென தனியாக ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டு கண்காணிப்பு செய்ய வேண்டும்.  காமராஜபுரம் அண்ணா கிழக்குத் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டு அடைப்பையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும், என்றார்.

  இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சாலைமுத்து, நகரப் பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், சின்னம்மாள், பிஆர்ஓ சித்திரவேல், வேலைக் குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 278 of 3988