தனியார் மயமாகும் 18 வார்டு துப்புரவு பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
Thursday, 28 November 2013 10:06
administrator
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமலர் 28.11.2013 தனியார் மயமாகும் 18 வார்டு துப்புரவு பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
திருச்சி: மாநகராட்சி பகுதியில், 18 வார்டுகளின் துப்புரவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க, திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று காலை மேயர் ஜெயா தலைமையில் நடந்தது. கமிஷனர் தண்டபாணி, துணைமேயர் ஆசிக்மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசுகையில், ""தெருக்கள் தோறும் வாகனத்தில் எடுத்து சென்று கொசு மருந்து அடிக்கும் எந்திரம், ஒரு ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ளது. சிறிய எந்திரங்களால் வார்டு முழு பகுதியிலும் கொசு மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்,'' என்றார்.
கமிஷனர் தண்டபாணி பேசுகையில், ""பெரிய எந்திரம் பழுதடைந்துள்ளது. அதற்கு பதிலாக. இரண்டு புதிய பெரிய எந்திரங்கள் வாங்கப்படும். அத்தோடு சிறிய எந்திரம் மூலம் வீடுவீடாக சென்று மருந்து அடித்ததால், பெரிய இயந்திரம் தேவையில்லாமல் போய்விட்டது,'' என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் அன்பழகன் பேசுகையில், ""கொசு அடிக்கும் எந்இயந்திரத்தை காலம் தாழ்த்தாமல், நான்கு கோட்டத்திற்கு தலா ஒரு இந்திரம் என போர்க்கால அடிப்படையில் உடனடியாக வாங்க வேண்டும்,'' என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் கவிதா பேசுகையில்,"" எனது வார்டில் சேதமடைந்துள்ள தேவராய நகர், சக்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட சாலைகளை புதுப்பித்து வழங்கும்படி, இரண்டாண்டாக கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் இந்த பணிகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்,'' என்று கூறிவிட்டு, அவர் உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
திருச்சி மாநகரில் உள்ள, 7, 8, 9, 28, 29, 61, 62, 64, 35 முதல், 38 வரை, 39, 63, 65, 40, 41, 45 ஆகிய, 18 வார்டுகள், சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்திமார்க்கெட் ஆகிய பகுதிகளின் துப்புரவு பணிகளை, ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானத்துக்கு, காங்கி., கவுன்சிலர் ஹேமா, அ.தி.மு.க., கவுன்சிலர் சுதாகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கமிஷனர் தண்டபாணி பேசுகையில், ""துப்புரவு பணியாளர் பற்றாக்குறை காரணமாக தனியார் மயத்தை தவிர்க்க முடியவில்லை. தனியார் மயம் என்றாலும், மாநகராட்சி நிர்வாக அமைப்பின் பணி, அந்த பகுதிகளில் தொடர்ந்து நடக்கும். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தான் தீர்மானம் ஒப்புதலுக்கு வந்துள்ளது,'' என்றார். இதையடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் மற்றும் மேலப்புதூர் ஆகிய இடங்களில் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க தேவையான பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
|
17 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு: இனி குடிநீர் விரயம் இருக்காது, என நம்பலாம்
Thursday, 28 November 2013 10:03
administrator
குடீநீர் வழங்௧ல்
தினமலர் 28.11.2013 17 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு: இனி குடிநீர் விரயம் இருக்காது, என நம்பலாம்
திருப்பூர் : இரண்டாவது குடிநீர் திட்ட குழாய்கள் 17 இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகி வந்த நிலையில், உடைப்புகளை சீரமைக்கும் பணி பணிகள் நடந்தன. குடிநீர் திட்டத்தை மறு சீரமைப்பு செய்வதே நிரந்தர தீர்வாக அமையும். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுகிறது. தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, அன்னூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊராட்சிகளிலுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் கடந்த 1993ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து 54 கி.மீ., தூரம் குழாய்கள்வழியாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, 332 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது; மாநகராட்சிக்குள் 9 கி.மீ., நீளத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது, அவிநாசி ரோடு குறுகியதாக இருந்த நிலையில்; போக்குவரத்து வளர்ச்சிக்கு ஏற்ப, ரோடு அகலப்படுத்தப்பட்டது. 21 ஆண்டுகளில், ரோடு விரிவாக்கம் காரணமாக, குழாய் ரோட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
அதிகபட்சம் 13 டன் எடை கொண்ட வாகனங்கள் சென்று வந்த ரோட்டில், 40 டன் எடை வரை எடை கொண்ட வாகனங்கள் செல்வதால், காரணமாக குழாய்கள் பாதிப்படைகின்றன.
குழாய் இணைப்புகளில் உள்ள ரப்பர் வாஷர்கள், 21 ஆண்டு பழையானதாலும், குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின் வெட்டு பிரச்னை காரணமாக,"வாட்டர் ஹார்மர்' எனப்படும் அழுத்தம் மாறி, மாறி வரும் சூழல் காரணமாகவும், திட்ட குழாய்களில் பல இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுதினமும் சராசரியாக மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. ரோடு குண்டும், குழியுமாக மாறுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கிறது. போதிய குடிநீர் கிடைக்காமல், வழியோர மக்களும் பாதிக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில், அன்னூர் பகுதியில் மூன்று இடங்களிலும், அவிநாசி பகுதியில் இரண்டு இடங்களிலும், திருப்பூர் பகுதியில் 12 இடங்களிலும் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வந்தது.இதனால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக உடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
குடிநீர் கசிந்த பகுதிகளில் உள்ள ரப்பர் வாசர்கள் மாற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் கன ரக வாகனங்களால் உடைப்பு ஏற்படாமல் இருக்க, அதிர்வை தாங்கும் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டன. சீரமைப்பு பணி காரணமாக வழியோர கிராமங்களில் இரண்டுநாள் குடிநீர் வினியோகம் பாதித்தது. நேற்று காலை பணிகளை நிறைவு பெற்று; குடிநீர் பம்பிங் பணிகள் துவங்கியது. 17 உடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு லட்சம் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு குடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது அதன் ஆயுட் காலம் 30 ஆண்டுகள் எனவும், மோட்டார்களுக்கு 15 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ; கன ரக வாகனங்களால் ஏற்பட்ட உடைப்பு ஆகிய காரணங்களில் அதிகளவு பாதித்த திட்டமாக இது உள்ளது.
திட்டத்தை மறு சீரமைப்பு செய்யவும், எதிர்கால ரோடு விரிவாக்கத்தையும் ஆய்வு செய்து, ரோட்டோரத்தில் மாற்றி அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். திட்டத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடையற்ற பேருந்து போக்குவரத்து சென்னையில் முன் உதாரணமாக அசத்துகிறது ஆமதாபாத் மாநகராட்சி
Thursday, 28 November 2013 09:55
administrator
ந௧ர்ப்புற போக்குவரத்து
தினமலர் 28.11.2013 தடையற்ற பேருந்து போக்குவரத்து சென்னையில் முன் உதாரணமாக அசத்துகிறது ஆமதாபாத் மாநகராட்சி
பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், தடையற்ற பேருந்து போக்குவரத்து, சேவையை செயல்படுத்தி, குஜராத்தின் ஆமதாபாத் மாநகராட்சி, மக்களை அசத்தி வருகிறது.சாலைகளில், மற்ற வாகனங்களுடன், பேருந்துகளும் செல்வதால், நெரிசல் மிகுந்த நேரங்களில், சேர வேண்டிய இடங்களுக்கு, பயணிகள் விரைந்து செல்ல முடிவதில்லை.இந்த சிக்கலுக்கு தீர்வாக, கொலம்பியா நாட்டின், போகோடா நகரில், 2000ம் ஆண்டில், பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், 'பேருந்துகளுக்கான தனிப்பாதை ஒதுக்கும் திட்டம்' துவக்கப்பட்டது.
தற்போது, பல்வேறு நாடுகளில், 166 நகரங்களில், 4,336 கி.மீ., தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி, 2.7 கோடி பேர் இந்த திட்டத்தால், பயன் அடைந்து வருகின்றனர்.இந்தியாவில்...இந்தியாவில், ஆமதாபாத், டில்லி, ராஜ்கோட், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட நிதி மூலம், சர்வதேச தன்னார்வ அமைப்பான, 'போக்குவரத்து மேம்பாட்டுக்கான கொள்கை ஆய்வு நிறுவனம்' (ஐ.டி. டி.பி.,) ஆலோசனையின் அடிப்படையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக, ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், தெரிவித்து உள்ளனர்.
ஆமதாபாத்தில்...
இந்த திட்டத்துக்காக, ஆமதாபாத் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட, ஏ.ஜே.எல்., நிறுவன, துணை பொதுமேலாளர் அகில் பஹம்பட் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, ஆமதாபாத்தில், ஏழு வழித்தடங்களில், 75 கி.மீ., துாரத்துக்கு, பி.ஆர்.டி.எஸ்., திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், தினமும், 1.30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த சேவையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, கண்காணிப்பது, செயல்படுத்துவது போன்ற பணிகள் மட்டும், ஏ.ஜே.எல்., மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பேருந்துகளை, இயக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம், அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனம், முறையான சேவையை, வழங்குவதை, உறுதிப்படுத்த பல்வேறு கண்காணிப்பு முறைகள், கடைபிடிக்கப்படுகின்றன. கி.மீ., அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு, தொகை வழங்கப்படும்.
கட்டணம்
அனைத்து நிறுத்தங்கள், பேருந்துகள், ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறையுடன், இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இந்த நிறுத்தங்கள், மாற்றுத்திறனாளிகளும், எளிதில் பயன்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பயன்படுத்துவோர், மற்ற பேருந்துகள், போன்று, படி ஏறாமல், தரை மட்டத்திலேயே, பேருந்தில் ஏற, உரிய வசதி செய்யப்பட்டு உள்ளது.நான்கு ரூபாயில் இருந்து, 30 ரூபாய் வரை பல்வேறு விதங்களில், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.குறைந்த வருவாய் பிரிவினர், மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், 'தரமான, தடையற்ற போக்குவரத்தை, உறுதி செய்தாலும், பேருந்து பயணத்துக்கான செலவு முன்பைவிட, 50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது' என்றனர்.
|
|