தினமணி 29.01.2014
“பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’
கோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சிக் கலையரங்கில் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மருத்துவக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாள்வது குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
- மருத்துவமனைக் கழிவுகள் மற்றும் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புக்குக் கருத்துக் கேட்கப்பட்டது. சிறிய கடைகளில் ஆய்வு செய்வதும் மக்களிடம் அபராதம் வசூலிப்பதும் கூடாது; உற்பத்தியாகும் இடத்திலேயே பிளாஸ்டிக் பொருள்களைத் தடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
- கருத்துகளைக் கேட்ட பின் மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
- தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவையை பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவது தான் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம். மாநகராட்சி மட்டும் தன்னிச்சையாகச் செயல்படாமல் மக்கள் கருத்தைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
- துப்புரவுத் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து தன்னார்வ அமைப்புகளிடம் விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அனைவரும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்.
- மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 10 சதவீத பிளாஸ்டிக் தான் அகற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் கருத்துக் கூறியபடி உற்பத்தியாகும் இடத்தில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் ஆதரவு தர வேண்டும்; வியாபாரிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.
உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்புடன் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்க தனியாக மையங்கள் ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.