தினமணி 03.02.2014
கொடைக்கானலில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு “சீல்’
கொடைக்கானலில் வாடகையை செலுத்தாத நகராட்சிக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கொடைக்கானல் நகராட்சிக்கு, ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் சாலை, அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில் பல மாதங்களாக நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகை பாக்கித் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இது குறித்து, நகராட்சி ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், 16 கடைக்காரர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தனர்.
எனவே, இந்த கடைகளை பூட்டி சீல் வைக்க, நகராட்சி ஆணையர் (பொறுப்பு)சாகுல்ஹமீது உத்தரவிட்டார்.
அதன்படி, குறிப்பிட்ட கடைகளை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சத்யா ஆய்வுசெய்து, பூட்டி சீல் வைத்தார்.
இதனிடையே, கொடைக்கானல் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் சாமுவேல், அசன், தங்கபாண்டியன் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையால், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடித்த 10 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.