தினமலர் 30.06.2010
இறைச்சிக் கழிவை ரோட்டில் கொட்டினால் “சீல்‘: மேயர் எச்சரிக்கை
திருப்பூர்: “”திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் பிளாஸ்டிக் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டினால், சம்பந்தப்பட்ட நிறுவனம், கடைகள் உடனடியாக “சீல்‘ வைக்கப்படும்,” என மேயர் செல்வராஜ் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் செந்தில்குமார், கமிஷனர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., – மா.கம்யூ., – இ.கம்யூ., – ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். விலையை குறைக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.பின்னர் நடந்த விவாதம்:மரியசிசிலியா (மா.கம்யூ.,): மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியல்கள் வார்டு மாறிக் குறிக்கப் பட்டுள்ளன; எம்.எஸ்., நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான முகவரிகள் மாறியுள்ளன.
ஷாஜகான் (அ.தி.மு.க.,): மாநகராட்சி பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வார்டுக்கும் ஒதுக்க வேண்டும்.
அருணாசலம் (இ.கம்யூ.,): ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மீதான தடை, அபராதம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் கழிவுகளால் நகரமே அசுத்தமடைகிறது.
முருகசாமி (அ.தி.மு.க.,): மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பிட வசதியை மேம்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.நகர் நல அலுவலர், பொம்மை போல உள்ளார்; அலங்கார பதவியாகவே உள்ளது. சுகாதார ஆய்வாளர்கள் நினைத்தால் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க முடியும்; அவர்கள் “ரிஸ்க்‘ எடுக்க விரும்பவில்லை.மற்ற அனைத்து உறுப்பினர்களும், இதே கருத்தை வலியுறுத்திப் பேச ஆரம்பித்தனர்.
மேயர் செல்வராஜ்: சுகாதார பிரிவில் பலமுறை தெரிவித்தும் “செவிடன் காதில் ஊதிய சங்கு‘ ஆகி விட்டது. கோழி இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். எம்ப்ராய்டரிங் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்படியே செய்ய வேண்டும். உடனடியாக இந்நிறுவனங்கள் தொடர்பான அசோசியேஷனை அழைத்துப் பேச நடவடிக்கை எடுக்கப்படும். கோழிக்கழிவுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டினால் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், இறைச்சி கடைக்கும் “சீல்‘ வைக்கப்படும். எந்தப் பகுதியில் கொட்டப் பட்டுள்ளதோ, அதற்கு அருகில் உள்ள நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும். அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் நோட்டீஸ் வினியோகித்து விடுங்கள்.
பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற, மின்வாரியம் நமக்காக சிறப்பு அலுவலரை நியமித்துள்ளது. மாநகராட்சி தரப்பில் 600 கம்பங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில், 400ஐ மாற்றவும், மீதமுள்ளவற்றை சரி செய்யவும் உறுதியளித்துள்ளனர்.கமிஷனர் ஜெயலட்சுமி: ஒரே வளாகத்தில் 24 குடும்பங்கள் வரை இருந்தது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது. ஆகவே, கூடுதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் எல்லை பிரச்னை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதை உடனே சரி செய்து விட்டோம். வேறு பகுதிகளில் இருந்தாலும் சரி செய்யப்படும், என்றார்.