தினமணி 21.09.2010
“மாநகராட்சியில் கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும்’
திருச்சி, செப். 20: திருச்சி மாநகராட்சியில் வார்டுக்கு தலா இரண்டு வீதம் 120 கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
மழைக்காலம் தொடங்கிவிட்டதை அடுத்து, திருச்சி மாநகராட்சி சார்பில் 60 புகை மருந்தடிக்கும் கருவிகளும், 60 தெளிப்பு மருந்தடிக்கும் கருவிகளும் வாங்கப்படவுள்ளன. ஏற்கெனவே, 18 புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும், ஒரு பெரிய அளவிலான வாகன இயந்திரமும் இயங்கி வருகின்றன.
லார்வா நிலையிலேயே கொசுப் புழுக்களை அழிக்கும் வகையில், 400 கிலோ மருந்து வாங்கப்பட்டுள்ளது. 250 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொசுப்புழுக்கள் உள்ள கழிவுநீர்ப் பகுதிகளில் தெளித்தால், அவற்றை உள்கொள்ளும் கொசுக்களின் வயிற்றில் பாக்டீரியாக்கள் பெருமளவில் உற்பத்தியாகி கொசுப் புழுக்களைக் கொன்று விடும். இந்த முறையில் தற்போது மாநகரப் பகுதிகளில் தீவிரமாக கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் சவுண்டையா. பேட்டியின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் உடனிருந்தார்.