தினமலர் 21.10.2010
சரவணம்பட்டி பேரூராட்சி ரோட்டில் “போர்வெல்‘
கோவை : பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டில் போர்வெல் அமைத்து தனியார் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் குடிநீர் எடுத்து வந்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். கோவை சத்தி ரோட்டிலிருந்து எல்.ஜி.பி. நகர் பகுதி தெற்கு பகுதி கோவை மாநகராட்சிக்கு சொந்தமானது. கிழக்குப்பகுதி சரவணம்பட்டி பேரூராட்சி 9 வது வார்டைச் சேர்ந்தது. இதன் இடையே 30 அடி அகலத்திலும் 500 அடி நீளத்திலும் கிழக்கிலிருந்து மேற்காக ரோடு அமைந்துள்ளது. இந்த ரோட்டை கிருஷ்ணாபுரம், எல்.ஜி.பி.நகர்.,பாலாஜிநகர், மாருதிநகர், வேல்முருகன்நகர், சக்திநகர், மணிநகர் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரோட்டிற்கு தெற்கு பகுதியில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் உள்ளது.
இந்நிலையில், எல்.ஜி.பி.,நகர் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுவதால் அதை சீரமைத்து புதியதாக ரோடு போடுவதற்கு சிங்காநல்லூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சரவணம்பட்டி பேரூராட்சி நிதியாக 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4.50 லட்ச ரூபாய் செலவில் தார் ரோடு புதியதாக போடுவதற்கான பணிகள் நேற்று துவங்கின.முதல் பணியாக ரோட்டை சீரமைத்து குழிமேடுகள் சரிசெய்யும் பணி நேற்று துவங்கியது. ரோட்டை சீரமைப்பதற்õக பொக்லைன் இயந்திரத்தை விட்டு சமப்படுத்தும் போது ரோட்டிற்கு கீழே போர்போடப்பட்டு அதில் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொக்லைன் ஆபரேட்டர் அதை தவிர்த்து மற்ற பணிகளை கவனிக்க முயன்றார். பொதுமக்கள் காம்ப்ளக்ஸ் உரிமையாளரை முற்றுகையிட்டனர்.
இத்தகவல் தெரிந்ததும் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பேரூராட்சி மற்றும் மாநகராட்சி சர்வேயர்களை அழைத்து நாளை( இன்று) முறையான ஆவணங்களை சரி பார்த்து அளவீடு செய்து,ரோடு போடும் பணிகளை துவக்குவோம். அதுவரை போர் இருக்கும் இடத்தில் ரோட்டை தூர்வார வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் நேற்று நடந்தன. இதனால் சரவணம்பட்டி பகுதியில் நேற்று காலை 10.00 மணிமுதல் பகல் 2.00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.