தினமணி 15.09.2009
“1500 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 60 கோடி கடனுதவி’
திருச்சி, செப். 14: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 60 கோடி கடனுதவி அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் நவராத்திரி விற்பனைக் கண்காட்சித் தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
பெண்களுக்கு ஏற்றம் தரும் பல்வேறு நலத் திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. கருவில் பெண் குழந்தை இருந்தால் அதை அழிக்கும் அவலத்தை நீக்கும் வகையில், கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதைக் கண்டறியும் சோதனைக்கு தடை விதித்தது, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கியது என பல்வேறு சமூக நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.
இதுபோல, கிராமப்புறங்களில் பெண் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிற்படுத்தப்பட்ட, தலித் இனத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையைச் செலுத்தி, அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான பணிகளையும் இந்த அரசு செய்து வருகிறது.
திருமண உதவித் தொகை திட்டம், 50 வயதைக் கடந்த திருமணமாகாத பெண்களுக்கும், விதவை பெண்களுக்கும் உதவித் தொகை வழங்கும் திட்டம் போன்றவை திமுக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் 5000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10,000 சுழல் நிதி மற்றும் வங்கிக் கடன் ரூ. 50,000 வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.213 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் முன்னேற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்.
மேலும், இந்த விழாவில் மகளிர் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்த மலரை போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு வெளியிட, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.
விழாவில் தூய வளனார் கல்லூரி அதிபர் சூசை, கல்லூரி முதல்வர் ஆர். ராஜரத்தினம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், ஆர். ராணி, அ. சௌந்தரபாண்டியன், மா. ராஜசேகரன், மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணைமேயர் மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சங்கீதா வசந்தகுமார், மாநகராட்சி உறுப்பினர்கள் கே. வேலு, ஜெ. செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ஜெ. தனசேகரன் வரவேற்றார். மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் ப. சண்முகம் நன்றி கூறினார்