தினத்தந்தி 23.09.2013
ஈரோடு பஸ் நிலையத்தில் சுதந்திர தின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவு அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார்
ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திரதின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார்.
நுழைவு வாயில் வளைவு
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்திரோடு வழியாக செல்லும் பஸ்கள்
வெளியேறும் நுழைவு வாயிலில் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் மாநகராட்சி
சார்பில் சுதந்திர தின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவு அமைக்கப்பட்டு
உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர்
கே.சி.பழனிசாமி, ஆணையாளர் மு.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் திறந்து வைத்தார்
விழாவில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
புதிய நுழைவு வாயில் வளைவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில்
மாநகராட்சி என்ஜினீயர் ஆறுமுகம், மண்டல தலைவர் கேசவமூர்த்தி, 2–வது மண்டல
உதவி ஆணையாளர் அசோக்குமார், கவுன்சிலர்கள் குப்புசாமி, விநாயகமூர்த்தி, நகர
அ.தி.மு.க. மாணவர் அணி பொருளாளர் முருகானந்தம், சூரம்பட்டி நகர அ.தி.மு.க.
செயலாளர் சூரம்பட்டி ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நுழைவு வாயில்
வளைவு திறக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த வழியாக அனைத்து பஸ்களும்
செல்லத்தொடங்கின. இதனால் கடந்த 2 மாதங்களாக நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டு
இருந்த போக்குவரத்து நெரிசல் முற்றிலும் நீங்கியது.
காங்கிரசார் கொண்டாட்டம்
ஈரோடு பஸ்நிலையத்தில் நுழைவு வாயில் வளைவு அமைக்க வேண்டும் என்று ஈரோடு
நகராட்சியாக இருந்த போதே காங்கிரஸ் கவுன்சிலர் சார்பில் தீர்மானம் கொண்டு
வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது ஈரோடு பஸ்நிலையத்தில்
சுதந்திரதின வெள்ளிவிழா நுழைவு வாயில் வளைவு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.
விடியல்சேகர் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை பொதுச்செயலாளர்
கே.என்.பாஷா முன்னிலையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மைப்பிரிவு
துணைத்தலைவர் முகமதுஅர்சத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.