தினமணி 14.05.2010
காலாவதி உணவுப் பொருள்களை விற்போருக்கு கடும் தண்டனை
நாகர்கோவில், மே 13: கன்னியாகுமரி மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் நடைபெற்ற இம்மையத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற தீர்மானங்கள்:
போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்வோரின் சொத்துக்களையும், வங்கி சேமிப்புப் பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
நாகர்கோவில் இந்துக் கல்லூரி அருகே 8 ஏக்கர் பரப்பிலுள்ள அனாதை மடத்தில் முதியோர் கிராமம் அமைக்க வேண்டும்.
நாகர்கோவில் நகராட்சியின் சர்.சி.பி. ராமசாமி ஐயர் நினைவுப் பூங்காவை பராமரிக்கவும், சுற்றுச்சுவரை மாற்றி, பலமான இரும்புக் கம்பிகள் அமைத்து அனைவரும் இலவசமாக உள்ளே சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத மின்வெட்டை நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படும் பேருந்துகளை மாற்றிவிட்டு, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
அனைத்துப் பேருந்துகளிலும் சீரான கட்டணம் வசூலிக்க வேண்டும். தனியார் தயாரித்து விற்பனை செய்யும் பாலை அடிக்கடி ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்.
பார்வதிபுரத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். நாகர்கோவில் நகர குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மாவட்டத்தில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்: தலைவர்– எம். தாமஸ், துணைத் தலைவர்கள்– எஸ்.எச். அசன், ஆர். ரவீந்திரன் நாயர், ஏ. ஜோசப் சொர்ணராஜ், ஆர். ஷெலின்மேரி, பொதுச் செயலர்– ஏ.பி. சுந்தர்ராஜன், இணைச் செயலர்கள்– வி. ராஜேந்திரன், பி. பெருமாள், பி. சொரிமுத்து, ஏ. டெய்சி, பொருளாளர்– எம். அல்போன்ஸ் மற்றும் 19 பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.