தினத்தந்தி 29.10.2013
திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகள் ஆகின்றன: சட்டசபையில் மசோதா தாக்கல்

திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை
உயர்த்தப்படுகின்றன. இதற்கான மசோதாக்கள் சட்டசபையில் நேற்று தாக்கல்
செய்யப்பட்டன.
இரு மசோதாக்கள்
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம், ஊரக
வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
கே.பி.முனுசாமி இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஜெயலலிதா அறிவிப்பு
தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கலில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு வகை செய்யவேண்டிய பணிகளின்
அளவீட்டினையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதை கருத்தில்
கொண்டு, ‘‘தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக நிலை
உயர்த்தப்படும்’’ என்று, பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா
அறிவித்தார்.
அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் மாற்றமைப்புகளுடன்,
ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. அதற்கு செயல்வடிவம்
கொடுப்பதற்கு, இந்த சட்டமுன்வடிவு செயல்வடிவம் கொடுக்கவிழைகிறது.
இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளன.
செயல் வடிவம் பெறுகின்றன
தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி குறித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின்
அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் மசோதா தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு மசோதாக்களும், இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகின்றன.