தினகரன் 25.08.2010
நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
தேனி, ஆக. 25: தேனி மாவட்டத்தில் நகராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அல்லிநகரம் நகராட்சியில் தேனி&பாபாஸ் சாலையில் சிட்கோ பின்புறம் 7.35 ஏக்கர் பரப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. பஸ் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இடத்திற்கு வனத்துறை சார்பில் குத்தகை ஒப்பந்தம் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தின் வரைபடத்தை பார்வையிட்டார்.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக கருவேலநாயக்கன்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமையவிருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்பு விஸ்வநாததாஸ் காலனியில் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்துவரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
பின்பு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,“தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க தொழில்நுட்ப அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. ஒப்பந்த புள்ளி பணிகள் விரைவில் துவங்கும். நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.’’ என்றார்.
ஆய்வின்போது, நகராட்சிகளின் மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் அசோகன், நிர்வாக பொறியாளர் மருதுபாண்டியன், தேனி நகராட்சி தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் இலங்கேசுவரன், ஆணையாளர் மோனி, பொறியாளர் கணேசன், நகர அமைப்பு அலுவலர் ராமசாமி, நகர அமைப்பு ஆய்வாளர் புவனேஸ்வரன் உடனிருந்தனர். இதேபோல், சின்னமனூர், கம்பம் நகராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.