தினமலர் 12.03.2010
பொள்ளாச்சியில் கலப்பட பருப்பு குடோன் : நகராட்சி அதிகாரிகள் அதிரடி ரெய்டு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் சுகாதாரத்துறையினர் பருப்பு குடோன்களில் ரெய்டு நடத்தியதில் கலப்பட பருப்பு மாதிரி எடுத்தனர்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில், உணவு ஆய்வாளர்கள் சுப்புராஜ், மோகனரங்கம், கோவிந்தராஜ் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பருப்பு குடோன்களில் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். மார்க்கெட் ரோடு, தெப்பக் குளம் வீதி, சத்திரம் வீதியில் உள்ள பருப்பு குடோன்களில் ரெய்டு நடத்தினர்.குடோனில் இருந்த பருப்பு வகைகளில் கலப்பட பருப்பு இருப்பதை உறுதி செய்தனர். ஒவ்வொரு மூட் டையில் இருந்தும் பருப்பு மாதிரி எடுத்தனர். மொத்தம் நான்கு இடங்களில் உணவு பொருள் ஆய்வுக்காக மாதிரி எடுத்தனர். மாவு மில்களில் ரெய்டு நடத்தி, கடலைமாவு மாதிரி எடுத்தனர்.நகராட்சி கமிஷனர் வரதராஜ் கூறியதாவது: பருப்பு வகைகளில் கலப்படத்தை தடுக்க பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ உத்தரவிட்டுள்ளார். பருப்பு குடோன்களில் உணவு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.பருப்பு வகைகளில் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உணவு மாதிரியின் ஆய்வக அறிக்கை வந்த பிறகு கலப்பட பருப்பை விற்பனைக்காக வைத்திருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கேசரி பருப்பு கலப்படத்தால் முடக்கு வாத நோய், கேன்சர், வயிறு தொடர்பான பிரச்னைகள், ஜீரண கோளாறு, நரம்பு தொபர்பான பிரச்னைகள் ஏற்படும். அதனால், கேசரி பருப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் கேசரி பருப்பை, நல்ல பருப்புடன் கலப்படம் செய்கின்றனர். இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.கடைகளில் பருப்பு வகைகளை வாங்கும் போது, ஒரே நிறத்தில், ஒரே பருமன் உள்ள பருப்பு வகைகளை வாங்கினால் கலப்பட பொருட்களை தவிர்க்க முடியும்.இவ்வாறு, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோலார்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தெற்கு ஒன்றியத்தில் கலப்பட பருப்பு தடுப்பு ரெய்டு நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் மொத்தம் 12 கடைகளில் விற்பனை க்கு வைத்திருந்த கலப்பட கடலைமாவை அழித்தனர். கடைகளில் மாதிரி எடுக்கப்பட்ட துவரம்பருப் பை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.