தினமலர் 29.04.2010
மளிகை கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
தர்மபுரி: தர்மபுரியில் மளிகை கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் துவரம்பருப்பில் கலப்படம் இருப்பதாக சென்னை உணவு பொருள் வழங்கல் ஆணையகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. ஆர்.டி.ஓ., மணிவண்ணன் தலைமையில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், சுகாதாரத்துறை இணை இயக்குனரகத்தை சேர்ந்த ராமநாதன், கணேசன், நகராட்சி கமிஷனர் அண்ணாதுரை, சுகாதார ஆய்வகளர்கள் முனிராஜ், மதனகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் தர்மபுரியில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.சோதனையின் போது துவரம்பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு நடந்தது. சில கடைகளில் மாதிரிக்கு துவரம் பருப்புகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதியில் இந்த சோதனை நடந்தது. ‘தரமான பருப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்‘ என சோதனையின் போது வியாபாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டன.
* அரூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அதிகாரிகள் உணவு பொருட்கள் தரம் குறித்து திடீர் சோதனை செய்தனர்.கலெக்டர் அமுதா உத்தரவுப்படி அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மளிகை கடைகளில் கேசரி பருப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடந்தது. பருப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இச்சோதனையில் ஆர்.டி.ஓ., மோயிசன், வட்ட வழங்கல் அலுவலர் மாறன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லோக சுப்பிரமணியம், டவுன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.