தினகரன் 24.09.2010
நூறு ஆண்டு நெருங்குவதால் 29ல் வெளியீடு ரிப்பன் மாளிகை சிறப்பு அஞ்சல் உறை
சென்னை, செப்.24: ரிப்பன் மாளிகை கட்டப்பட்டு 100 ஆண்டை நெருங்குவதையொட்டி ‘சிறப்பு அஞ்சல் உறை’ வெளியிடப்படுகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி மாநகராட்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கொண்டாட்டத்தை முன்னிட்டு, அகில இந்திய அளவில் மாநகராட்சிகளுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்த போட்டிகள் நேற்று தொடங்கியது. ஒலிம்பிக் ஜோதியை மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது மேயர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டு 322 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் கவுன்சிலர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது 1998ம் ஆண்டு கவுன்சிலர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அகில இந்திய அளவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அகில இந்திய அளவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்கும் போட்டிகள் 27ம் தேதி நடக்கிறது.
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை 1913ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது ரூ7.5 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடக்கிறது. நூறாண்டை நெருங்கும் இந்த கட்டட சிறப்பை விளக்கும் வகையில் ‘சிறப்பு அஞ்சல் உறை’ மாநகராட்சி சார்பில் 29ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.
ஆணையர் ராஜேஷ்லக்கானி, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், கொறடா ஏகப்பன், மண்டலக்குழுத் தலைவர் சண்முகசுந்தரம், கல்வி நிலைக்குழுத் தலைவர் ஜானகி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
சென்னை மாநகராட்சி உருவாகி 322 ஆண்டை முன்னிட்டு, நேரு ஸ்டேடியத்தில் கவுன்சிலர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. குண்டு எறியும் போட்டியில் கவுன்சிலர்களின் முக பாவம். அடுத்த படம்: ஓட்ட பந்தயத்தில் பெண் கவுன்சிலர்கள் காட்டும் வேகம்.
400 மீட்டர் ஓட்டம் மேயர் முதலிடம்
400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மேயர் மா.சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ்லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில் மேயர் முதலாவதாக வந்தார். கவுன்சிலர்கள் கணேசன் 2வது இடத்தையும், பாலகிருஷ்ணன் 3வது இடத்தையும் பிடித்தனர். பெண் கவுன்சிலர்களுக்கான 50 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் குண்டு எறியும் போட்டிகளும் நடந்தன.
