தினமணி 11.02.2010
அரியலூர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க நகர்மன்றம் ஒப்புதல்
அரியலூர், பிப். 10: அரியலூர் பேருந்து நிலையத்தின் ஓடுதளத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்க அரியலூர் நகர்மன்றம் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அரியலூர் நகராட்சியின் அவசரக் கூட்டம் கூட்டமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நகர்மன்ற நிர்வாக அலுவலர் த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் ஆகியோர் பேசியது:
அரியலூர் நகராட்சி மாவட்டத் தலைநகராக இருப்பதால், நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் வகையில், எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக, மாநில நிதிக் குழு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ.70 லட்சம் நகராட்சிக்கு மானியமாக கிடைக்கும். எஞ்சியுள்ள தொகை ரூ. 30 லட்சத்தை நகராட்சியின் பொது நிதியிலிருந்து அளிக்க மன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, எஞ்சியுள்ள தொகையான ரூ. 30 லட்சத்தை வழங்க நகர்மன்றம் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் த. ராமமூர்த்தி, நா. பாபு, ஐ.பி. மணிவண்ணன், எஸ்.எம். சந்திரசேகர், ரா. ராமு, மு. ராஜா, மாலா.ஆ.தமிழரசன், கோ. தவமணி, ச. வைதேகி, ம. மலர்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.