தினமலர் 12.03.2010
நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட அம்மன் சிலைகள் ஒப்படைப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் ஏழு ஆண்டாக தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலைகள் உரிய கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் நிரந்தர பஸ் ஸ்டாண்டு அமைக்க கடந்த 2003ம் ஆண்டு கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை சின்ன ஏரியை தேர்வு செய்து அங்கு பஸ் ஸ்டாண்டு அமைக்கும் பணிகள் துவங்கியது. அப்போது, சின்னஏரியில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 500க்கும் மேற்பட்ட வீடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
அந்த பகுதியில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த ஏழுபுள்ளதாட்சி மாரியம்மன் கோவிலையும் நகராட்சி நிர்வாகத்தின் இடிக்க முயன்றனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிகாலை வேளையில் கோவிலை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்தனர்.
அப்போது கோவிலில் இருந்த கருங்கற்களில் செதுக்கப்பட்டிருந்த அம்மன் சிலைகள், நாகர் சிலைகள் மற்றும் வேல், பூஜை பொருட்களை நகராட்சி நிர்வாகத்தினர் பத்திரமாக மீட்டு நகராட்சி அலுவலகத்தில் வைத்திருந்தனர்.”அம்மன் சிலை வெளியில் இருந்தால் உக்கிரம் தாங்காமல் கெடுதல் ஏற்படும்‘ என்ற தகவலால் அப்போதைய நகராட்சி நிர்வாகத்தினர், நகராட்சி அலுவலகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் அம்மன் மற்றும் நாகர் சிலைகளை வைத்து பாதுகாத்தனர்.
சின்னஏரியில் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் அருகில் உள்ள கீழ் சோமார்பேட்டை பகுதியில் குடியேறி அங்கு புதியதாக கோவில் கட்டினர். இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பாதுகாக்கப்பட்ட அம்மன் சிலைகளை புதிய கோவிலில் வைக்க வேண்டியிருப்பதால் அதனை ஒப்படைக்குமாறு கீழ்சோமார்பேட்டை ஊர் தலைவர் மோரனஅள்ளி, நாடராஜன், குப்பன் ஆகியோர் உள்ளிட்ட 10 பேர் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை குறித்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் கமிஷனர் பவுலோஸ் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசித்து அம்மன் சிலைகளைகளை ஒப்படைக்க முடிவு செய்தனர்.ஏழு ஆண்டுக்கு பின் நேற்று முன்தினம் காலை கீழ் சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறங்கி அம்மன் சிலைகள் மற்றும் நாகர் சிலைகளை வெளியே எடுத்தனர். சிலைகளை தண்ணீரில் இருந்து பூசாரிகள் வெளியே எடுத்த போது அங்கு கூடியிருந்த பெண்கள் அருள் வந்து சாமியாடினர்.
தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அம்மன் சிலை மற்றும் நாகர் சிலைகளுக்கு மலர் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் சிலைகளை நகராட்சி தலைவர் பரிதா நவாப், கமிஷனர் பவுலோஸ் ஆகியோர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.