தினமணி 29.09.2010
மூன்று பேரூராட்சிகளுக்கு ஒரேஒரு செயல் அலுவலர்! – பணிகள் பாதிப்பு
பொன்னேரி பேரூராட்சி அலுவலகம்
.பொன்னேரி, செப். 28: திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னசேக்காடு, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும் ஒரே ஒரு செயல் அலுவலர் பணியில் உள்ளதால் அடிப்படைப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் முழு வீச்சில் நடைபெற வேண்டிய சுகாதாரப் பணிகளும் தேக்கமடைந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வார்டுகளை உள்ளடக்கியதோடு, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது பொன்னேரி பேரூராட்சி. நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் வாய்ப்பும் உள்ளது.
இதே போன்று மீஞ்சூர், சின்னசேக்காடு பேரூராட்சிகளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் மீஞ்சூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக உள்ள செல்வமணிதான் பொன்னேரிக்கும், சின்னசேக்காட்டிற்கும் பொறுப்பு செயல் அலுவலர். பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம், புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு தருதல் ஆகிய பொது மக்களின் அன்றாட முக்கியப் பணிகளோடு, அடிப்படை பிரச்னைகளான தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர், கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் இந்த ஒரே ஒரு செயல் அலுவலர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொன்னேரி பேரூராட்சியில் செயல் அலுவலர் இல்லாததால் மேற்கண்ட சுகாதாரப் பணிகள் சரிவர செய்யப்படாமல் மந்த கதியில் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
அத்துடன் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், புதிதாக குடிநீர் இணைப்பு ஆகியவற்றை பெற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோள். சின்னசேக்காடு பேரூராட்சி மக்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது. மாவட்ட ஆட்சியரோ, பேரூராட்சிகளின் இயக்குநரோ இதை கவனிப்பாரா?