தினமணி 12.04.2010
குடிநீர் கட்டண உயர்வு: ஏப்ரல் 15-ல் இறுதி முடிவு
பெங்களூர், ஏப்.11: குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து வரும் 15-ம் தேதி அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பெங்களூரில் குடிநீர் விநியோகத்துக்கு கூடுதல் செலவு ஆவதால் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதா, வேண்டாமா என்பது குறித்து 15-ம் தேதி அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, மற்றும் அமைச்சர்கள், கட்சித் தலைவர்களுடன் ஆலோனை நடத்தி இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
கர்நாடகத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லை: பெங்களூரிலும் கர்நாடகத்தில் பிற மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மைக்குப் புறம்பானது. மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. நான் தற்போது 10 முதல் 15 மாவட்டங்ளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். இந்த மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இல்லை.
முன்பு வறட்சி நிலவிய வட கர்நாடகத்திலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. அவ்வாறு ஏதாவது மாவட்டத்தில் பற்றாக்குறை இருந்தால் அந்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் விடியோ கான்பரன்சிங் வசதி மூலம் தொடர்புகொண்டு பேசி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
கோடை காலம் துவங்கியுள்ளதை அடுத்து பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் தட்டுபாடின்றி சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். பற்றாக்குறை இருக்கும் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் (போர்வெல்) அமைத்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜகவில் மோதல் இல்லை: கர்நாடக பாஜகவில் கட்சியினர் இடையே மோதல், உட்கட்சி பூசல் இல்லை. கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். இந்த ஒற்றுமைதான் பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவை அமோக வெற்றிபெறச் செய்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: கர்நாடகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரும் 15-ம் தேதி துவங்குகிறது. கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளிடம் மக்கள் தங்களது கல்வி, பொருளாதாரம், பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து சரியான தகவல்களை அளித்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அவர்.