தினமணி 16.04.2010
15 வேலம்பாளையம் நகராட்சி வரிவசூலில் முறைகேடு
திருப்பூர், ஏப். 15: நகராட்சி வீட்டுவரி விதிப்பில் இடைத்தரகர்களை அனுமதித்து லட்சக் கணக்கில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடந்த 15 வேலம்பாளையம் நகராட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., நகர்மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினர்.
15 வேலம்பாளையம் நகராட்சிக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் எஸ்.பி.மணி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. துணைத் தலைவர் சரோஜா, செயல்அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற உறுப்பினர் குணசுந்தரி (மார்க்சிஸ்ட்) பேசுகையில், நகராட்சி வரிவசூல் பணியில் இடைத்தரகர்களை அனுமதிப்பதால் அப்பணிகள் முறையாக ந டைபெறுவதில்லை. இப்பிரச்னைகள் குறித்து மக்கள் நகராட்சி அலுவலகத்தில் கொடுக்கும் மனுக்களையும் இடைத்தரகர்கள் படித்து, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர்.
மேலும், வீட்டு வரி விதிப்புக்கு ரூ. 20 ஆயிரம், குடிநீர் இணைப்புக்கு ரூ. 10 ஆயிரம் என்று பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையை உடனடியாக மாற்ற, மக்கள் தரும் மனுக்களை முறையாக பதிவு செய்வது, அதற்கான நடமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், என்றார்.
நகர்மன்றத் தலைவர் எஸ்.பி.மணி, இப்பிரச்னை குறித்து நகர்மன்ற கூட்டத்தில் விவாதிக்க முடியாது, சம்பந்தப்பட்டவர்களே நேரிடையாக மனு கொடுக்கட்டும் என்று தெரிவித்து, உரிய பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஆவேசமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூ., நகர்மன்ற உறுப்பினர்கள் சரோஜா (துணைத்தலைவர்), குணசுந்தரி, வேலுமணி ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக செயல்அலுவலர் குற்றாலிங்கம், அனைத்து பணிகளையும் துரிதமாக செ யல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.