தினமலர் 01.09.2012
20 ஆண்டுக்குப்பின் மாநகராட்சி மீட்பு:சாலையை ஆக்கிரமித்து வாகன நிறுத்தம்
அடையாறு:தனியார் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்திய சாலையை, மாநகராட்சி மீட்டது.அடையாறு, ஜீவரத்தினம் பிரதான சாலையில் இருந்து, பரமேஸ்வரி நகருக்குச் செல்லும் இணைப்பு சாலை, 30 அடி அகலமும், 329 மீட்டர் நீளமும் கொண்டது. இச்சாலையை, தனியார் சிலர் ஆக்கிரமித்து, வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வந்தனர். 20 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்தது. சென்னை மாநகராட்சி, இந்த ஆக்கிரமிப்பை அகற்றியது. கார் பார்க்கிங் பகுதியில் இருந்த சிமென்ட் தரை தளங்களை அகற்றி, இணைப்பு சாலையை மீட்டனர். விரைவில், தார் சாலை அமைக்கப்படும் என, மாநகராட்சியினர் தெரிவித்தனர்.
மாநகராட்சியின் இணைப்பு சாலை ஒன்று உள்ளது என்பது, பலருக்கு தெரியாமல் மூடி மறைக்கப் பட்டிருந்தது. அந்தளவுக்கு சாலையை தனியார் குடியிருப்புடன் இணைத்து, மதில்சுவர் எழுப்பி, தரைத்தளம் போட்டிருந்தனர். அந்த குடியிருப்பிற்கு, விஞ்ஞானி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் குடி வந்தார். அவரின் காரை, ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்த முயன்றார். அதற்கு, ஏற்கனவே அங்கு குடியிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி மறுத்தனர். ஆத்திரமடைந்த விஞ்ஞானி, அதை ஆக்கிரமிப்பு இடம் என கண்டுபிடித்து, புகார் தெரிவித்தார். அதன் மூலமே, அந்த இடத்தில் பொது சாலை இருந்தது தெரியவந்தது. அதன் பின், முறைப்படி நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றி, 15 அடி அகல சாலையை மீட்டுள்ளனர். ஆனால், அச்சாலை 30 அடி என்பதால், மேலும், 15 அடி அகல சாலை எங்குள்ளது என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.