தினமணி 06.08.2013
தினமணி 06.08.2013
விருதுநகர் நகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா
விருதுநகர் நகராட்சியில் ரூ.10 லட்சத்தில்
புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் உபயோகத்திற்காக மக்களவை
உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் நகராட்சியின் 6-வது வார்டில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சி
பூங்கா தொடக்க விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்து பேசியதாவது: விருதுநகர்
நகராட்சியில் 6-வது வார்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர்
எம்.எஸ்.பி. நாடார் பூங்காவை புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை
மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் மக்களவை தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து
பொதுமக்களின் உபயோகத்திற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில்
பெரியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஹாலோ பிளாக் கற்கள் பதித்து
நடைபாதை, மையப்பகுதியில் தியான மேடை அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகளின்
நடமாட்டத்தை குறைக்கும் வகையில் முன்பக்கத்தில் சுற்றுச்சுவர்,
குடியிருப்பு பகுதிகளைச் சுற்றி கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே
அமைதியான சூழ்நிலையில் உள்ள இப்பூங்காவை பொதுமக்கள் நன்கு பராமரித்து
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர தலைவர் பாப்கான்
கார்த்திகேயன், நகர் நல அமைப்புச் செயலாளர் மருத்துவர் ரத்தினவேல்,
வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.கே.எஸ்.பி.சங்கரபாண்டியன், நகராட்சி
உறுப்பினர்கள் பேபி, சுந்தர், பழனிவேல்ராஜன், கட்சியின் நிர்வாகிகள்
உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.