தினமலர் 29.04.2010
நெல்லை மாநகராட்சி புதிய பஸ்ஸ்டாண்ட் வாகன காப்பகத்தில் இன்று ‘ஸ்மார்ட் கார்டு‘ வசதி துவக்கம்
திருநெல்வேலி : தமிழகத்தில் முதல்முறையாக நெல்லை மாநகராட்சி புதிய பஸ்ஸ்டாண்ட் வாகனக்காப்பகத்தில் மஞ்சள், சிவப்பு நிறங்களில் நவீன ‘ஸ்மார்ட் கார்டு‘ வசதி இன்று (29ம்தேதி) துவக்கப்படுகிறது.நெல்லை புதிய பஸ்ஸ்டாண்ட் வாகனக்காப்பகம் கடந்த 1ம்தேதி முதல் மாநகராட்சி மூலம் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி., கேமரா இங்கு பொருத்தப்படவுள்ளது. வாகனக்காப்பகத்தில் 12 ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 4.5 லட்சம் ரூபாய் செலவில் நவீன முறையில் ஸ்மார்ட்கார்டு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.காப்பகத்திற்கு வரும் வாகனங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. கார்டிலும், வாக்கிடாக்கியுடன் இணைந்த கார்டு ரீடர் மிஷினிலும் வாகன எண் பதிவு செய்து வாகன உரிமையாளரிடம் கார்டு வழங்கப்படுகிறது. வாகனத்தை வெளியே எடுத்துச்செல்லும் போது காப்பகத்தில் இருக்கும் கார்டுரீடர் மிஷினில் பதிவு சரிபார்க்கப்பட்டு வாகனத்தை வெளியே எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.காப்பகத்தில் ‘ஸ்மார்ட் கார்டு‘ வசதியளிக்கும் பணியை சென்னை பாண்ட்வேலி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவன பணியாளர்கள் மைக்கேல்ராஜ், முத்துக்குமார் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், கமிஷனர் பாஸ்கரன், மண்டலத்தலைவர்கள் சுப. சீதாராமன், முகம்மதுமைதீன், சுப்பிரமணியன் முன்னிலையில் செயல்விளக்கம் செய்துகாட்டினர். மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயண நாயர் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
பாதுகாப்பு அதிகம் : கமிஷனர் பாஸ்கரன் கூறும்போது, ”புதிய பஸ்ஸ்டாண்ட் வாகனக்காப்பகத்திற்கு ஒரு நாளைக்கு 3,500 வாகனங்கள் வந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 11 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. எதிர்காலத்தில் வாகன காப்பகத்திற்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே வாகனக்காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மஞ்சள், சிவப்பு நிறங்களில் வாகன உரிமையாளருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது.
ஒரு நாள் மட்டும் வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு மஞ்சள் நிற கார்டு வழங்கப்படும். வாகனத்தை நிறுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரம் கணக்கிடப்பட்டு 3 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 30 நாட்களுக்கு வாகனத்தை நிறுத்துபவர்களிடம் 90 ரூபாய் கட்டணம், திருப்பி பெறத்தக்க டிபாசிட் கட்டணம் 50 ரூபாய் சேர்த்து 140 ரூபாய் பெற்றுக்கொண்டு சிவப்பு நிற கார்டு வழங்கப்படும். வாகன உரிமையாளர் கார்டை காப்பகத்தில் திருப்பித்தரும் போது 50 ரூபாய் வழங்கப்படும். இம்முறையில் கார்டு பெறுபவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வாகனத்தை நிறுத்திச்செல்லலாம்.
கார்டில் வாகன எண் பதிவாகும். மிஷினில் உள்ள மெயின் சர்வரில் எண் பதிவாகும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட கூடுதல் நேரம் வாகனத்தை நிறுத்தியிருப்பவர்கள் வாகனத்தை எடுக்க வரும் போது கார்டை மிஷினில் இணைத்தவுடன் ‘பீப்‘ ஒலி கேட்கும். கூடுதல் நேரத்திற்குரிய தொகை ரசீதில் வரும். ரசீதில் உள்ள தொகையை உரிமையாளர் காப்பகத்தில் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச்செல்லலாம். கார்டை தவற விட்டவர்கள் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ஸ்மார்ட் கார்டு முறை பாதுகாப்பானது. செலுத்தப்படும் தொகை மிஷினில் பதிவு செய்யப்படுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை ஸ்மார்ட் கார்டு தவறி வேறு யார் கைக்கு கிடைத்தாலும் வாகன பதிவு எண் தெரியாது என்பதால் காப்பகத்தில் வாகனம் திருடப்பட வாய்ப்பு இல்லை. வாகனத்தில் உள்ள அனைத்து வாகனங்களின் பதிவுஎண்களை கம்ப்யூட்டரில் பார்த்து உடனே தெரிந்து கொள்ளலாம். பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காப்பகத்தில் உள்ள வாகனங்கள் திருடப்பட வாய்ப்பு இல்லை.” என்றார்.
இம்முறை மூலம் வாகனக்காப்பகம் மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் வரும் என மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நான்கு சக்கர வாகனத்திற்கு நாள் கட்டணம் 10 ரூபாய், ஆட்டோவிற்கு 5 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பஸ்ஸ்டாண்டில் அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 ரூபாய், மூன்று சக்கர வாகனங்களுக்கு 75 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. மாநகராட்சியே வாகனக்காப்பகத்தை தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.நெல்லை புதிய பஸ்ஸ்டாண்ட் வாகனக்காப்பகத்தில் ‘ஸ்மார்ட்‘ கார்டு வசதியை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் இன்று(29ம்தேதி) துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் முதல்முறையாக நெல்லை மாநகராட்சியில் தான் பஸ்ஸ்டாண்ட் வாகனக்காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு வசதி துவக்கப்படுகிறது.