தினகரன் 06.08.2010
கடைகள் ஏலத்திற்கு கடும் போட்டி ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்கு ஜாக்பாட்
ஒட்டன்சத்திரம், ஆக. 6: ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டு கடைகள் கடும் போட்டிகளுக்கிடையே அதிக தொகைக்கு ஏலம் போனது.
ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டு கட்டிடங்கள் பாழடைந்து கிடந்ததால் அவற்றை புதுப்பித்து நேற்று கடைகள் பகிரங்க ஏலம் நடந்தது. மொத்தம் 26கடைகள், ஒரு உணவு விடுதி, ஒரு கட்டண கழிப்பறை ஆகியவற்றுக்கு ஏலம் நடந்தது.
இதில் 2,3,4,5 ஆகிய கடைகளுக்கு ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் கோர்ட் மூலம் தடை உத்தரவு வாங்கியிருந்ததால், அவற்றுக்கு மட்டும் ஏலம் நடக்கவில்லை.
பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) செல்வா தலைமை வகித்தார். கடை ஏலம் எடுப்பவர்கள் ரூ.1 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்தே கடைகளை ஏலம் எடுக்க மிகவும் கடுமையான போட்டி நிலவியது.
கடை எண் 1க்கு மாத வாடகை ரூ.24ஆயிரத்திற்கு முருகராஜ் என்பவர் ஏலம் எடுத்தார். இதில் மூன்று ஆண்டுக்கான வாடகையை ஏலம் எடுத்த மூன்று நாட்களுக்கு மொத்தமாக செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. எனவே இந்த ஒரு கடைக்கு மட்டும், டெபாசிட் சேர்த்து ரூ.10 லட்சம் வரை பேரூராட்சிக்கு வருமானம் கிடைத்துள்ளது.
இதே போல் மற்ற கடைகளும் மாதம் ரூ.10ஆயிரத்திற்கும் மேல் தான் ஏலம் போனது. வேறு எந்த பேரூராட்சியிலும், இந்த அளவு உயர்ந்த தொகைகளுக்கு கடைகள் ஏலம் போனதில்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.