தினமணி 22.04.2010
புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்பு
பெங்களூர், ஏப்.21: பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்கள்.
மாநகராட்சிக்கு மார்ச் 28-ல் தேர்தல் நடந்தது. அதன் பிறகு மாநகராட்சி மன்றம் வெள்ளிக்கிழமை முதன்முதலாக கூடுகிறது. வெள்ளிக்கிழமை கூடும் மாநகராட்சி மன்றத்தில் முதலில் மேயர் தேர்தல் நடைபெறுகிறது.
மேயர் தேர்தலில் போட்டியிடுவோர் காலை 8 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். இதையடுத்து காலை 10 மணிக்கு மேயர் úóதர்தல் நடைபெறும். மேயர் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் தேர்தல் முடிவடைந்ததும் துணை மேயர் தேர்தலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நடத்துவார். துணை மேயர் பதவி பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேயர், துணை மேயர் தேர்தல் முடிவடைந்ததும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொள்வார்கள். இவர்களுக்கு கோட்ட ஆணையர் ஜி.எம். தனஞ்செயா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். மொத்தம் 8 நிலைக்குழுக்கள் உள்ளன, வரி மற்றும் நிதிக் குழு, நகரத் திட்டக்குழு, பொது சுகாதாரம், பொதுப்பணிக் குழு, கல்வி மற்றும் சமுக நீதி, அப்பீல் குழு, கணக்குக் குழு மற்றம் தோட்டக் கலைத்துறை குழு என 8 குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாநகராட்சிக்கு இதற்கு முன் 2001-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. அந்த மாநகராட்சியின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரைச் சுற்றியுள்ள 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 110 கிராம பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டன.
2007-ம் ஆண்டு மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்டது. மாநகராட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 100-ல் இருந்து 198 ஆக உயர்ந்தது.
மாகராட்சியின் பதவிக்காலம் முடிவடைந்து சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 111 வார்டுகளை பாஜக கைப்பற்றி மாநகராட்சி நிர்வாகத்தைப் பிடித்துள்ளது.
65 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தையும் 15 இடங்களில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதாதளம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. 7 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார்கள்.
தமிழர்கள் வெற்றி: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியில் தற்போது 25-க்கும் அதிமான தமிழர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.